December 31, 2008
December 30, 2008
திருமணம் எதிர்பார்ப்புக்களும் எதிர்பாராதவையும்...
ஆயிரம் காலத்துப் பயிர் என்றும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவது என்று திருமணங்கள் சொல்லப் பட்டாலும் தகவல்களால் நிரம்பிய உலகத்தில் குழப்பங்கள் தானா? என்று எண்ணத் தோன்றுகின்றது. நண்பர் கமலுக்கு கல்யாண ஆசை வந்திட்டுது போல எல்லாரட்டையும் திருமண முறிவு ஏன் ஏற்படுது என்று கேட்டிருக்கின்றார்.
சேர்ந்து வாழுவதற்கு காரணம் தேடிய காலம் போய், இன்று பிரிந்து வாழுவதற்கு காரணம் தேடுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
1) விவாகரத்து இன்றைய உலகில் அவசியம் தானா?? அல்லது விவாகரத்துப் பெறுவது இன்றைய உலகில் ஓர் நாகரிகமாகிவிட்டதா???
திருமணம் என்றால் என்ன? எனக்கு எப்படி ஒரு வாழக்கைத்துணை வேண்டும் என்றும் ஒரு தெளிவு இருக்க வேண்டும். ஒரு ஆண், பெண்ணின் குண இயல்பு என்ன?, அவளுக்குரிய காலச்சக்கரத்தில் அவளின் பிரச்சனை என்ன என்று தெளிவும், பெண்ணுக்கு ஆணைப் பற்றிய அறிவும் இருக்க வேண்டும். குடும்பம் என்றால் என்ன அதன் நன்மைகள் என்ன ஒரு தெளிவு இருக்கவேண்டும்.
உதாரணத்திற்கு, கறுப்பின மக்கள் அமெரிக்க மண்ணிற்கு தெற்காசிய மக்களை முன் வந்திருந்தாலும், அறிவியல் துறைகளில் அவர்களின் வீதம் குறைவு. இதற்கான அடிப்படை காரணம், விவாகரத்து அதிகமாக கறுப்பு இனத்தில் இருப்பதாலும், குழந்தைகள் தாய் அல்லது தந்தை என்று ஒருவரிடம் மாத்திரம் வளர்கின்றதால் என்று சில ஆய்வுகள் சொல்கின்றது.
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு மேற்குலகில் திருமணம் என்ற ஒன்று அவசியமில்லை. மேல் நாட்டு சட்ட திட்டங்கள் பிரிந்து வாழ்வதற்கான வழிமுறைகளையே ஊக்குவிக்கின்றன. டாகடர் பெம்பிளை வேண்டும் என்றால் அதற்கான விட்டுக் கொடுப்புகளுக்குத் ஆண் தயாராக இருக்க வேண்டும்.
தாம்பத்திய வாழ்வில் சுவாரசியமும், பிடிப்பும் இருவருக்கும் இடையில் இருக்கும் நிலை இருந்தால் பல சிக்கல்களுக்கு தீர்வு வந்து விடும். குழந்தை பிறந்த பின் தன்னைப் பற்றி கண்டு கொள்ளாமல் ஏனோ தானோ என்று ஒரு பெண் நடந்து கொள்வதாலும் குடும்பங்களில் குழப்பம் உருவாகின்றது.
நம் வாழ்க்கையில் தேர்வு செய்யும் வாழ்க்கைத்துணையில் தான் எமது 90% மான சந்தோசமும், கஸ்டமும் தங்கியிருக்கின்றது என்கின்றார் ஒரு மேற்கத்தேச அறிஞர். விட்டுக் கொடுத்து வாழத் தெரியாதவர்களின் இறுதி நிலை விவாகரத்துத் தான்.
2) பெரும்பாலும் இந்த விவாகரத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் யார்???
கோபம் வந்தால் அதிகம் பேசுபவர்கள் பெண்கள், மெளனித்து விடுபவர்கள் ஆண்கள் அதனால் எது காரணம் என்று நான் சொல்ல வரவில்லை. உத்தியோகம் புருச லட்சணம் என்பார்கள். ஆண்கள் "தான் ஆண் என்ற ஆதிக்கமும்" ஆனால் பெண்ணின் உழைப்பில் தங்கியிருக்கும் நிலை இருந்தால் தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணம். நான் தனித்து வாழலாம் என்ற மேலோங்கிய எண்ணமோ அல்லது என்னை அவர் கண்டு கொள்வதில்லை என்ற மன அங்கலாய்ப்போ விவாகார ரத்துக்கு காரணம்.
"கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம், காசிருந்தால் வாங்கலாம்" என்ற எண்ணப்பாடுகள் கூட விவாகரத்தில் தான் போய் முடியும். ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை நேசிக்கலாம், பழகலாம் ஆயினும் நான் தான் அவர் மனைவி என்ற தெளிவு இருக்க வேண்டும். அவர் என்னை விட்டு விட்டு போய் விடக்கூடாது என்ற அளவுக்கு மிஞ்சிய கட்டுப் பாடுகளை ஆணுக்கு பெண் விதித்தாலும் நிலைமை கவலைக்கிடம் தான்.
அழகான மனைவி வேண்டும் என்று எடுத்து விட்டு, அவளை சந்தேக கண்ணுடன் பார்க்கும் ஆண்களாலும் இந்த நிலை தான். ஆண் பெண் இரு பாலாருக்கும் இடையில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை தான் காரணம். திருமணத்தின் முன் உறவை வைத்திருக்கும் ஆணோ அல்லது பெண்ணோ அப்பாவித்தனமாக வருகின்ற வாழ்க்கைத் துணையிடம் தம் அனுபவங்களை ஒப்பிட முயன்றாலும் நிலைமை கவலைக்கிடம் தான்.
3) விவாகரத்தினூடாக எதிர்காலச் சந்ததிகளின் வாழ்க்கை முறை கட்டியெழுப்பப் படுகின்றதா??? இந்த விவாகரத்தின் மூலம் எதிர்காலச் சந்ததிகளிற்குக் கிடைப்பவை என்ன??? அவற்றுக்கான காரணம் என்ன???
தன்னம்பிக்கை இல்லாததும், சமுதாயத்திற்கு சவாலாக அமைந்து விடும் இளையவர்களை தான் திருமண முறிவுகள் ஏற்படுத்துகின்றன. தந்தை உலகத்தை பார்க்கும் விதமும், தாய் உலகத்தை பார்க்கும் விதமும் வேறு , இவை இரண்டும் குழந்தைக்கு தேவையாம்.
உளவியலும், சமூகவியலும் தான் ஒரு மனிதனை சம்பிரதாயங்களுக்குட்பட்ட மனிதர்களாக வாழ வழிவகுக்கின்றது. ஆனால் சமுதாயத்தை வெறுக்கின்ற அல்லது அதன் நம்பிக்கை இல்லாத இந்த சந்ததியனர், தம் செய்கைகளை நியாயப் படுத்துபவர்களாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர்களாகவும் வாழ ஆரம்பித்து விடுகின்றார்கள்.
தனித்தாயின் வளர்ப்பில் வளரும் பெண் குழந்தைகள், தாய்க்கு ஏன் இந்த நிலை உருவானது? ஆண்களுக்கு நான் அடி பணியக் கூடாது என்ற ஆண்களுடன் போட்டி போடும் கலாச்சாரமாக வளர்ந்து விடுகின்றாள்.
4) விவாகரத்து எம் தமிழ்ச் சமூக அமைப்பில் அதிகரித்துச் செல்வதைக் குறைக்க ஏதேனுன் வழிமுறைகள் உள்ளனவா?? உங்கள் பார்வையில் ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா??? நீங்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்???
புரிந்துணர்வை வளர்க்க வாய்ப்புகள் உருவாக வேண்டும். திருமணமான நண்பர்கள் குடும்பங்களாக ஒன்று கூடும் போது மனம் விட்டு பிரச்சனைகளை பேசும் போது இது எல்லா வீட்டிலும் நடக்கும் விடயம் அதை பெரிது படுத்தக் கூடாது என்று தெளிவு வரும். பெண்கள் நம்பிக்கையான தோழிகளிடம் கட்டில் முதல் தொட்டில் வரையுள்ள அனுபவங்களை பகிரும் போது பல விடயங்களில் தெளிவு உருவாகின்றது.
நமக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் அறியும் பக்குவம் இருப்பின் எமக்கு ஒரு திருப்தி உண்டாகும். உங்களை ஒருவர் எப்படி நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ அதைப் போல் அவரையும் நேசிக்கப் பழக வேண்டும். தீர்வு என்று ஒருவரியில் சொல்ல ஒன்றுமில்லை.
அப்புக்குட்டி மாதிரி ஆக்களுக்கு நான் பதில் சொல்லுவதை விட உளவியல் நிபுணர் டாக்டர் சாலினி அனைத்துலக தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பெண்களின் உளவியல் பற்றி நல்லாச் சொல்லிய்ருக்கின்றார். உங்களுக்காக உங்கு எடுத்து போட்டிருக்கின்றன். முழுதாக கேட்டு முழு மனிதராக குடும்பம் குட்டி என்று சந்தோசமாக வாழ்கின்ற வழியைப் பாருங்கோ.
DR. Shalini Women Concerns and Solutions.wav - Dr. N. Shalini
உங்கள் பார்வையயும் தாருங்கள்.
Read more...
December 25, 2008
தூங்குபவரை எழுப்பலாம் நடிப்பவர்களை அல்ல!
மாதாவிற்கே இந்த நிலை என்றால் நம்மவர் நிலை என்ன? அரசியல் ஒரு சாக்கடை என்பார். ஈழத்து அரசியலை எள்ளி நகையாடும் தேசியம் பேசும் தேசிய வாதிகளே, தகவல் வலையின் தகவல்களால் தடம் மாறி விட்டீர்களோ, அல்லது உங்கள் தனி அடையாளங்களைப் பெறுவதற்கு என்னவும் எழுதிக் கொள்ளலாம் என்று எண்ணமா? தமிழ் என்று அடையாளத்தால் தமிழ் மணம் திரட்டிகளினால் தங்கள் எண்ணக் கருக்களை தரும் உங்களுக்கு என்ன குழப்பம். நீ சிந்திக்க என் சிந்தனையின் சில துளிகள்.
தமிழ் நாட்டு தொட்டி பட்டி எல்லாம் திரிந்தவன், அன்னை இந்திராவின் காலத்தில் இருந்து அவர் தம் புதல்வன் ஆட்சி வரை உங்கள் மண்ணின் மனங்களின் மாற்றத்தை கண்கூடாக பார்த்தவன் நான். தேசியம் பேசும் பாரத தேசத்தின் பகுப்பறிவாளனே, தகவல்களை கண்மூடித்தனமாக உள்வாங்குவது அறிவு கிடையாது, அதை பகுத்தறிய உனக்கு நேரம் தேவை. ஏன் என்ற கேள்விகள் எழுப்பாமல் ஒன்றை பின் தொடர்ந்தால் அது மதம் அரசியல் அல்ல.
நீ நாடாரா அல்லது நாயக்கரா என்று நடு வீதியில் அடித்துக் கொண்டும், என் சாதித் தலைவன் என்று சிலை வடித்து பறைசாற்றி நிற்கும் நீ, ஈழத்தமிழன் விடயத்தில் நீ தேசிய வாதியோ!, பாடசாலைப் படிப்பு முடிந்து பட்டப் படிப்பு படிக்க வேண்டுமாயின், சாதிச் சான்றிதழ் தான் உன் அடையாளம் ஆயினும் நீ தேசிய வாதி. தேசத்தின் மேல் பற்று வை அது தவறல்ல, ஆனால் அதை தட்டிக் கேட்கவும் மறந்து விடாதே.
காமராசர் வாழ்ந்து வளர்த்து விட்ட காங்கிரசு கட்சி தொண்டனே, டெல்லி சென்னை வந்து ஆலோசனை கேட்ட காலம் அன்று, சென்னை டெல்லி சென்றாலும் ஆலோசனை கேட்காது காங்கிரசு கூட்டுக் காலம் இது. உன் இறையாண்மைக்கு ஈழத்தான் என்ன தடை. ஈழத்தான் இழப்பு உன் சினிமாவில் பார்க்கும் ஒரு காட்சியாக நினைத்து மறந்து விடுகின்றாயா?
இது புலி அல்ல கோமாதா! இந்தவாய் பேசா ஜீவன்கள் கூட உன் பார்வையில் பயங்காரவாதிகளா?
உன் நாட்டில் ஒரு தலைவன் மட்டும் தான் கொல்லப் பட்டதாக எண்ணிக் கொள்ளும் உன்னால் பழைய வரலாறுகளை ஏன் தட்டிப் பார்க்க முடியவில்லை. இரத்தம் சிந்தாப் போராட்டம் தான் சிறந்தது என்று சொல்லிக் கொள்ளும் நீ, திலீபன் அண்ணா உண்ணா நோன்பு இருந்து உன் தேசத்தை நோக்கி விட்ட தார்மீக போராட்டத்தை தட்டிக் கழித்து விட்ட வரலாற்றுத் தவறை ஏன் எண்ண மறுக்கின்றாய். சோற்றுக்கு மாரடித்த உதிரி இயக்கங்களைஆயுதத்தை எடு, போடு என்று ஏவி தெரிந்த அரசுகளுக்கு நம் போராட்டம் ஒரு கேலிக் கூத்துத் தான்.
உலகில் பெரிய ஜன நாயக நாடென்று மார் தட்டி சொல்லும் அந்நாட்டின் குடிமகனுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை. சீமானில் பேச்சு பல உண்மைகளை வெளிப்படியாக சொல்லியிருக்கின்றது. சீமானின் பேச்சில் உன் இறையாண்மைபோய் விடும் என்றால் உன் நாட்டின் இறையாண்மை ஒரு நூல் இழையில் இணைக்கப் பட்டுள்ளதா?
மும்பாயில் வெடித்த போது நாமும் வருந்தி நின்றோம், உன் தேசத்தின் பிச்சைக்காசில் நம்மினத்தை அழிக்கும் சிங்களம் மும்பாய் சம்பவத்தை உனக்கு படிப்பினை என்று எள்ளி நகையாடியது. ஆயினும் நீ உதவச் சொல்வாய் ஏனென்றால் நீ தேசியாவாதி.
நீ நாட்டைக் கடக்க இந்தியன் என்ற கடவுச்சீட்டு என்று ஒன்றிருந்தாலும், சில நாடுகளுக்கு செல்லும் போது உன் மொழி, மதம் என்பது அடையாளப் படுத்தப் படுவது இன்றைய யதார்த்தம். அக்கிறாகரத்தில் பிறந்தாலும் கமல்ஹாசன் என்ற பெயர் இருந்தால் இஸ்லாமியரோ என்று அஞ்சி சில நாடுகள் அனுமதி மறுத்த வரலாறு உண்டு.
இத்தாலிய அம்மையாரை உன் நாட்டு முதல் குடிமகளாகவும் கொள்கை வகுப்பாளாரகவும் எற்றுக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்ட நீ ஏனோ உன் பொக்கிள் கொடி உறவின் உணர்வை அறிய முடியவில்லை.
வன்னியில் வாழும் மக்களின் அவல நிலையை உன்னால் பார்க்கமுடியாவிட்டாலும் உன் தேசத்தின் அகதி முகாமில் வாழ்வோரை சென்று பார். அப்போதாவது உன் மனிதம் உன்னை உறுத்துகின்றதா என்று எண்ணிப்பார். அகதி வாழ்வு என்ன என்று தெரிய விரும்பின், ஆண்டுகள் பலவற்றை அடிமைகளாய், காலைக்கடன் கழிப்பதற்கும் காவல்காரன் அனுமதி பெற்று, மானத்தை மறைப்பதற்கு துணி அணியும் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் நம்மவர், இங்கு அவமானத்தை மறைக்க முகங்களை மறைத்து திறந்த வெளியில் காலைக்கடன் முடிக்கும் பரிதாப நிலை. சாறிகள் தான் அவர்களை பிரித்து வைக்கும் வாழ்விடம். இந்தப் பரிதாபத்தை நேரில் சென்று கேட்டறிந்தவன். மேற்குலகில் அகதியாக வந்தவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கின்றது. உன் தேசத்தில் அகதியாய் இருப்பவர் நிலை கவலைக்கிடம் தான்.
விடியலுக்காக காத்திருக்கும் எங்களுக்கு, உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருக்க முயற்சி செய், உன் தேசிய வளங்களை ஒருமைப்படுத்தி, கங்கையும், ஜமுனையும், காவேரியும் கலந்திட முயற்சி செய். தமிழன் என்ற அடையாளத்தை மறந்து விடாதே. உன் நாட்டின் கொள்கை வகுப்பாளர்களை, உன் தேசத்திற்கு அருகில் ஒரு நேச நாடு எல்லைகளால் பிரிக்கப்பட்டாலும் மொழியினால் இணைக்கப்படும் ஒரு நாடு உருவாக ஒரு கணமாவது சிந்தி என் இனமே!
ஆக்க பூர்வமான கருத்துக்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்.
படங்கள்: நன்றி, www.seithy.com
December 20, 2008
குழந்தை வளர்க்க கற்றுக் கொள்ள வேண்டுமா?
இன்றைய குழந்தைகள் நாளைய மன்னர்கள், மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுத் தரவேண்டுமா? குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பிலே என்று பலரும் பல கருத்துக்களை முன் வைக்கின்றார்கள். இந்தக் கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. சென்னையிலிருந்து உளவியல் நிபுணரும், சமூக சேவகியுமான டாகடர் சாலினி அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து குழந்தை வளர்ப்பை பற்றி அறிவு பூர்வமானதும் நாம் எல்லோரும் அறிய வேண்டிய கருத்துப் பதிவு.
DR. Shalini. PARENTING.17.12.08.wav -
Read more...
December 19, 2008
எம்மில் சினிமாவின் பாதிப்பையறிய விடப்பட்ட வினாக்களுக்கு...
எனக்கும் சினிமா விமர்சனத்திற்கும் ரொம்பத்தூரம். நண்பர் மெல்போர்ன் கமல் கேட்டுக் கொண்ட அழைப்பிற்காக விடை காண முயல்கின்றேன். சிறிய வயதில் சினிமாப் பிரியன், பார்ப்பதற்கு வீட்டில் அனுமதி கிடைப்பது குறைவு என்பதால் போலும். எனது ஊரில் மகாத்மா, லக்ஸ்மி என்று இரண்டு சினிமாக் கொட்டகைகள். இங்கு வரும் சினிமாக்கள் அனேகமானவை மிகவும் பழைய படங்கள். எனது தந்தை யாழ்ப்பாண நகரில் வேலை செய்த்ததால் வார விடுமுறை நாட்களில் அப்பாவிற்கு மதிய உணவு கொண்டு சென்று கொடுக்கும் சாட்டில் சினிமா பார்ப்பதுண்டு.
1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
ஆறு வயதில் மூத்த சகோதரர்களுடன் சென்று படம் பார்க்க போய் பாதியில் அழுது கொண்டு வீடு திரும்பிய நினைவு உண்டு. படம் ஞாபகம் இல்லை.
2) நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
நிறம் மாறாத பூக்கள் படத்தை யாழ்ப்பாணம் வின்சர் தியட்டரில் பார்த்தேன். அந்தக் காலத்தில் வந்த அறிமுக நடிகர்களை வைத்து எடுத்திருந்த படம். இப்படத்தில் அதிகமான நடிகர்கள் தங்கள் சொந்தப் பெயரிலேயே நடித்திருந்தார்கள். சுதாகர், ராதிகா, விஜயன்,ரதி போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் ராதிகா காதலித்து விட்டு வந்து தந்தையிடம் தன் காதலை சொல்லுகின்ற போது தந்தை ஆத்திரப்பட்டு அப்படியென்றால் தன் இனிசலை நீ பாவிக்க முடியாது என்று சொல்வார். அதற்கு ராதிகா "நான் இப்பவும் "S" ராதிகா , புரியலையா சுதாகர் ராதிகா" என்பார். " முதன் முதலாக காதல் டூயட் பாடவந்தேன்", " ஆயிரம் மலர்களே" போன்ற பாடல்கள் இன்றும் என் மனதில் அழியாமல் பதிந்திருக்கின்றது.
3) என்ன உணர்ந்தீர்கள்?
MGR, சிவாஜி காதல் காட்சியை விட சற்று யதார்த்தமான காதல்காட்சிகள், ஒளிப்பிடிப்பு, பாட்டுக்கள் பார்ப்பதற்கு சற்று யதார்த்தமாக இருந்தது. கதா நாயகர்களின் பேரை பார்த்து படம் பார்த்த காலம் இது. அப்போது யார் டைரக்டர், இசையமைப்பாளர், ஒளிப்படப்பாளர் என்று தெரியாத காலம். பாரதிராஜாவின் டைரக்சனில், பாக்கியராஜ்ஜின் கதையில், இளையராஜாவின் இசை அமைப்பில் வந்த படம் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன். நல்ல கொம்பினேசன் உள்ள வர்கள் போட்டி போடாமல் ஒன்று சேர்ந்தால் படங்கள் வெற்றி பெறும் என்பதை இப்போது உணர்கின்றேன்.
4)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
வாழ்த்துக்கள்: தமிழ் உணர்வாளர் சீமானின் படைப்பில் வந்த குடும்பப் படம். மாதவன், பாவனா நடித்த படம். இப்படியெல்லாம் குடும்பங்கள் அமையாதோ என்று எண்ணத் தோன்றுகின்ற படம். தமிழ் தனித்துவமாக உச்சரிக்கப்படுவது இந்தப் படத்தின் சிறப்பு. புலம் பெயர்ந்து தாய் தந்தையரை பிரிந்து வாழும் எம் போன்றோருக்கு குடும்பப் படங்கள் கொஞ்சம் உணர்வு பூர்வமாக அமைந்து விடுகின்றது.
5)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?
சேவல்: பரத், பூனம், சிம்ரன், வடிவேல் நடித்த படத்தை வீட்டில் பார்த்தோம். நல்ல படம் என்று வீட்டுக்காரர் சொல்ல, எதிர்பார்ப்பில் பார்த்ததோ தெரியவில்லை. சப் என்று போய் விட்டது. அரைத்த மாவை எவ்வளவு நாளைக்குத்தான் அரைப்பார்கள். இப்போது சினிமா எடுக்க எந்த சரக்கும் தேவையில்லையோ என்று எண்ணத் தோன்றிற்று.
6)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
சிவசங்கரியின் கதையில் வந்த 47 நாட்கள் கதையை பாலச்சந்திரரின் டைரக்சனில் எடுக்கப்பட்ட " 47 நாட்கள்" திரைப்படம். வெளி நாட்டு மாப்பிள்ளை அப்பாவித் தமிழ் பெண்ணை திருமணம் செய்து வெளி நாடு கொண்டு சென்று அவள் படும் பாடுகள், பாசை பிரச்சனைகள் போன்றவற்றை வெளிப்படுத்த யதார்த்தமாக எடுத்த படம்.
"இந்தியத் தாய் நாட்டை என்ணுகின்றாள் மங்கை, சென்றிட வழியில்லை, தாய் வீட்டுத் தீபங்கள் துணையாக வாராதோ இன்று" என்ற வரிகள் எல்லோர் மனதையும் உருக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
"மொழி" படம் எடுக்கப் பட்ட விதம், பாடல்கள் நடிப்பும் பிடித்திருந்தது.
7)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சினிமாவிற்குள் அரசியலை விட சினிமாவிற்கு வெளியே இருக்கும் அரசியல் தான் தமிழ் நாட்டில் அதிகம். அதனால் எனக்கு பெரிதாக சொல்லத் தெரியவில்லை.
8)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஆங்கிலப் படங்கள் நிறைய பார்ப்பதால், தமிழ்ச்சினிமா தொழில் நுட்பம் என்று பெரிதாக சொல்லத் தெரியவில்லை. கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்றவற்றை சொல்லலாம்.
9)தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இல்லை. இங்கு கனடாவில் ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் "சினி மினி மசாலா" என்று வார விடுமுறைகளில் கேட்பதுண்டு. நிச்சயமாக அவர்கள் நிறைய தமிழ்ச்சினிமா பற்றி வாசித்து விட்டு மிகவும் சுவாரசியமாக தகவல் கூறுவார்கள். யாருக்கும், யாருக்கும் காதல், யார் முழுகாமல் இருக்கின்றார். எந்தக் கூட்டு பிரிந்தது என்று விளாசித்தள்ளுவார்கள்.
10)தமிழ்ச்சினிமா இசை?
நிறையப் பாடல்கள் பழைய பாடல் மிக்ஸ் ஆக வருகின்றது. நிறைய புது இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் உருவாகி இருக்கின்றார்கள். ஊரில் ஆரம்பித்த பாட்டுக்குப் பாட்டு இந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது. விஜய் டி.வி யின் சுப்பர் சிங்கர், ஜோடி, மற்றும் பல பாட்டு நிகழ்ச்சிகளால் தமிழ் சினிமாவின் இசை ஓரளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என நம்புகின்றேன்.
11)தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலப் படங்கள் தான் பார்ப்பதுண்டு. "SPEED", "Phone Booth" போன்ற படங்களில் படம் எடுக்கப் பட்ட விதம் ஒரு சிறிய விடயத்தையும் இரசிக்கத்தக்க விதமாக தருவது என்னை பல தடவை சிந்திக்க வைத்துள்ளது. "American Pshyco", "How to loose a guy in 10 days" போன்ற படங்கள் மனிதர்களின் "ஈகோ" எவ்வளவு தூரம் ஆட்டி வைக்கும் என்பதையும் ஆண், பெண் உளவியல், அணுகுமுறைகளை நம்பத்தக்க வகையில் எடுத்துள்ளார்கள்.
12)தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தமிழ்ச் சினிமா வளர சில படங்களை திரையில் பார்ப்பதை விட வேறு பங்களிப்பு என்று பெரிதாக சொல்ல இல்லை. ஒரு கைதியின் டயரி படம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எடுக்கப் பட்டபோது தான், ஒவ்வொரு கலைஞனும் ஒரு சிறிய காட்சி எடுப்பதற்கு, அதுவும் இரட்டை வேடம் என்றால் எவ்வளவு சிரமம் எடுக்கின்றார்கள் என்று கண்கூடாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
13)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது. அதற்கேற்ப தொழில் நுட்பமும் கதை அமசங்களும் கொண்ட படங்கள் வந்தால் இது வளரும். திரைப்படக்கலைக் கல்லூரிகளின் தரம் மேலும் வளர்ச்சியடைந்து தமிச் சினிமா வளரும் என நம்புகின்றேன்.
14)அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஒன்றும் பெரிதாகி ஆகி விடாது. தமிழ் நாட்டுப் பொருளாதாரம், இந்தத் துறையை சேர்ந்த மக்களின் வாழ்க்கை நிலை பாதிப்படையும். தன் பாதிப்புக்கு உதவாத எதுவும் தங்களுக்கும் தேவையில்லை என்று குழப்பங்கள் எழலாம்.
அப்பாடா, ஒரு மாதிரி கிறுக்கியாச்சு, சொற்பிழை, பொருட் பிழை காணாது, வந்த வாசித்ததிற்கு நீங்களும் உங்க பாட்டுக்கு சொல்லிட்டு போங்கோ.
December 14, 2008
தனி மனித அடையாளங்களும் குழப்பங்களும்..
மனிதர்களில் சிலர் தம் சுய அடையாளத்தை பெற்று கொள்ள சிலர் நட்புகளையும் உறவுகளையும் கையாளும் முறையில் வித்தியாசப்படுகின்றனர். ஒரு மனிதன் தன்னைப்பற்றிய எண்ணத்தை தனக்குள் குறைத்து மதித்துக் கொண்டு மற்றவர்கள் மத்தியில் தன்னைப் பற்றிய மிகைப்படுத்திய எண்ண வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் போது தனக்கும் மற்றவர்களுக்கும் சவாலாக அமைந்து விடுகின்றான்.
"பாம்பு சீறுவது " அதனுள் ஏற்பட்ட பயத்தினால் தான், தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அது சீறுகின்றது. இது போல் நம்மவரில் சிலர் தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காகவும், தங்களைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்பதற்காகவும் தாங்கள் கோபக்காரர்களாக காட்டி ஒரு மாய வலையை போட்டு விடுகின்றார்கள்.
அதே சமயம் இன்னொருவர் இரக்க சுபாவம் உள்ளவர் என்று அடையாளம் கண்டால், அவரை தன் வசம் இழுக்க தன் சொந்தக் கதை, சோகக்கதை சொல்லி மற்றவரின் அனுதாபத்தை பெறுவதில் முனைப்பாக இருப்பார்கள்.
ஒரு சிலர் நட்புகள், உறவுகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஒருவரைப் பற்றி மற்றவருக்கும் கருத்துக்களை பரிமாறி பிரிவினை ஏற்படுத்தி விட்டு இருவரிடமும் நண்பர்கள் போல் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள். இந்த நவீன நாரதர்கள் தாங்கள் நட்புக்களுக்கு உதவுவது போல் வெளியே சொல்லிக் கொண்டாலும் அவர்களை பிரித்து அதில் தாங்கள் உதவுவதாக நடித்துக் கொள்வார்கள். இவர்களை சரியான நேரத்தில் அடையாளம் காணாவிட்டால் பல உறவுகளை இழந்து விடுவோம். இவர்களை அடையாளம் காணத் தான் வள்ளுவன் "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு " என்று சொல்லியுள்ளான் போலும்.
சில ஆண்கள் திருமண வயதில் திருமணமாகாது, தனித்தவர்களாக வாழும்போது பலருக்கும் சவாலாக அமைந்து விடுகின்றார்கள். இவர்களுக்கு சமூக அடையாளம் குறைந்து விடுகின்றது. இவர்கள் தங்கள் ஆண்மையை பற்றி தன் நட்புகள் தவறாக எண்ணக் கூடாது என்பதற்காக தன்னுடன் பழகும் பெண்களைப் பற்றி குறைவாக கூறி தம்மை நியாயப்படுத்த முயல்வார்கள். ஒரு பெண்ணின் முன் இன்னொரு பெண்ணைப் பற்றி சொல்லி அதில் ஆதாயம் தேடவும் முற்படுவார்கள். இவர்கள் தங்களை நியாயப் படுத்த "மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது "என்று சொன்ன விடயங்களை மற்றவர்களிடம் போட்டுடைத்து விடுவார்கள். இதை நியாயப்படுத்த " உளவியல் பிரச்சனை" என்று சொல்ல சிலர் முனைவதும் உண்டு. என்னப் பொறுத்தவரையில் உளவியல் சம்பந்தமான வருத்தம் உள்ளவர்கள் தன்னிலை அறியாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்படி மூர்க்கதனமாக நடப்பவர்களின் செயற்பாடு தன்னிலை அறிந்த செயற்பாடு. உதாரணமாக குடிவெறியில் கத்திக்கொண்டிருப்பவர் பொலிசைக் கண்டவுடன் வாய் அடைத்து நிற்கின்றார். ஏன் என்றால் அவருக்கு சத்தம் போட்டால் என்ன பின் விளைவு என்று தெரிந்த படியால் தான்.
விட்டுக் கொடுத்து நடப்பவர்கள் எளியவர்களாகவும், கத்திக் குளறி நடப்பவர்கள் பலமானவார்களாகவும் சிலர் எண்ணி சிலரை கண்டு கொள்ளமலும் நடந்து கொள்கின்றார்கள். ஒருவர் அடிக்கடி கோபப்பட்டால் அது பலவீனம் அது பலம் அல்ல!
கலைஞர்கள், பொது அமைப்பு, அரசியல் உறுப்பினர்களிடையே தனி மனித அங்கீகாரத்துக்கான போட்டி பெரிதும் நிலவும். இவர்களுக்கு ஒரு மனப் பக்குவம் வேண்டும். இல்லையேல் இவர்களுக்கிடையில் இருக்கும் போட்டி பொறாமையாக வளர்ந்து பிரிவுகளும், தேவையில்லாத பிரச்சனைகளும் தோன்றுகின்றன. இதில் வால் பிடிப்பவர்களால் தான் அனேகமான பிரச்சனைகள் உருவாகின்றன.
அமெரிக்க அரசியலில் போட்டி போட்டு அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்ட ஒபாமாவால் பல சவால்களின் மத்தியில் தன் அடையாளத்தை அமெரிக்க மக்களின் முன் வைக்கமுடிகின்றது. தன்னுடன் கட்சித்தலைவருக்கு போட்டியிட்ட கிலறி கிளிண்ட்னை தனது அரசில் முக்கிய பகுதிக்கு அமத்தும் அளவிற்கு அவருக்கு பக்குவம் இருக்கின்றது. இந்த பக்குவம் நம்மவர்களுக்கும் தேவை.
நாலுமுழ வேட்டி கட்டி நாசனல் போட்டு நின்று அல்லது பட்டுச் சேலை கட்டி, நெற்றிக் குங்குமமிட்டு சபை தனை அலங்கரிப்பது மாத்திரம் நமது அடையாளங்கள் என்று நின்று விடாமல், மனதளவில் மற்றவர்களின் அடையாளங்களையும் மதித்து நடப்பவர்களாக முயற்சிக்க வேண்டும். கல்வி ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தும் கருவி, சிலர் கல்வி தம் தனி மனித அங்கீகாரத்தை தருவதாக கருதி பலரை புறக் கணித்து வாழ்கின்றார்கள்.
பணம், கல்வி, அந்தஸ்து , புகழ் என்ற அடிப்படையில் மனித அடையாளங்களை பார்க்காமல் எல்லோரையுடைய சுய அடையாளங்களையும் மதித்து, முடிந்தால் அவர் உங்களை கேளாமல் நீங்கள் அவருக்கு முன்னுதவ வரவேண்டும்.
வெற்றி பெற்ற மனிதர் ஒருவரைப் பற்றி நான் எழுதிய பழைய கட்டுரை வாசித்துப் பாருங்கள்.
December 7, 2008
மும்பாய் சம்பவத்தில் உயிர் நீத்த அப்பாவி மக்களுக்கான கனடியரின் அக வணக்கம்.
இந்திய மக்களை உலுக்கிய மும்பாய் கொடூர சம்பவம் உலகத்தின் எல்லா மூலையில் வாழும் மக்களின் மனதை பாதித்துள்ளது. பல இனங்களை சேர்ந்த மக்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மூன்று கனடியர்களும் கொல்லப் பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அக வணக்கம் செலுத்துவதற்கு பல்வேறு அரசு சார் அமைச்சர்களும் பல்லினத் தலைவர்களும் கலந்து கொண்டு பிரார்த்திது கொண்டார்கள்.
ஈழத்தவனுக்கு இழப்பு என்பது ஒவ்வொரு நாளும் நடைபெறும் துர்பாக்கியமான நிலை. அவனுக்கு மற்றவர்களுக்கு இழப்பு எற்படும் போது அதன் வலியை யதார்த்தமாக உணர்ந்தவன். இந்திய உறவுகளுடன் கை கோர்த்து நாமும் எமது பிரார்த்தனையை செய்தோம். கனடிய தமிழர் பேரவை இயக்குனர் ஒருவர், கனடாவில் வாழும் தமிழர்கள் சார்பில் குப்பி விளக்கேற்றினார்.
பல நாட்டு தூதரகங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் வணக்கத்தை தெரிவித்திருந்தார்கள். கனடிய பிரதம மந்திரியின் செய்தியை குடிவரவு குடியகல்வு பல் கலாச்சார அமைச்சர் Jason Kenny வாசித்தார். அவரும் விளக்கேற்றி வணக்கத்தை தெரிவித்தார்.
கனடிய அரசியலில் இந்தியர்களின் அடையாளத்தை முன் வைத்தவரும் முன்னாள் பிரிட்டிஸ் கொலம்பியாவின் முதலமைச்சரும், இந்திய அரசினால் இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்தியர்களுக்கான அதி உயர் விருது பெற்றவரும் சட்ட வல்லுனருமான Ujjal Dosanjh மிகவும் பொறுப்பான உரையை முன் வைத்தார். தீவிரவாதம் என்பது ஒரு இனத்தையோ, மதத்தையோ, மொழியையோ கொண்ட பார்வையாக இருக்காது இதை ஒழிப்பதற்கு எல்லோரும் முன் வரவேண்டும். இந்தியா உலகிலேயே ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் நாடுகளில் பெரியது, அதன் ஜன நாயகத்துக்கு சவால் என்றால், நம் எல்லோருக்கும் அது சவால் என்று குறிப்பிட்டார்.
வலய உறவுகளுடன் சேர்ந்து நாமும் பிரார்த்தித்து நிற்போமாக!
படங்கள்: நன்றி! www.ninaivukal.com
December 6, 2008
மேற்குலகில் நம்மவர் காதல்.
மேற்குலகில் வாழும் இளையோருக்கு வாழ்க்கை ஒரு போராட்டம் தான். கல்லூரி நாட்களில் தனக்கு ஒரு காதல் இல்லாவிட்டால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று ஓர் அழுத்தம். அதற்காக காதல் இல்லாதவர்களும் காதல் ஒன்று இருப்பதாக நடித்துக் கொள்வார்கள்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில இளைய பெண் பிள்ளைகளின் பெற்றோர் தன் பிள்ளையில் நம்பிக்கையில்லாமல், அவள் போகுமிடம் எல்லாம் பின்னே திரிவார்கள். "என்ன கொடுமை அய்யா இது" என்று இவற்றை விமர்சிப்பவர்களும் உண்டு. பிள்ளை வீடு திரும்பினானா இல்லையா என்று தெரியாத ஒரு கூட்டமும் உண்டு. ஆண், பெண் இரு சாராருக்கும் தாம் மிகவும் கெட்டித்தனமானவர்கள் பெற்றோர்களுக்கு போதிய அறிவு இல்லை என்ற ஒரு நிலைப்பாடும் இருக்கின்றது.
கல்லூரியில் கற்கும் சில ஆண்கள் காலத்திற்கு காலம் பெட்டி மாத்திற மாதிரி காதலியை மாற்றுவார்கள், ஆனால் காதலில் தோல்வியுற்ற பெண்ணை விமர்சிப்பவர்களும் இவர்கள் தான். கல்லூரியில் அனேகமான காதல் கீரோக்களாக தங்களை உருவகித்துக் கொள்ளும் இளைஞர்கள் பெண்களின் பலவீனத்தை நன்கறிந்தவர்களாகவும் காதலை காய் வெட்ட நொண்டிச்சாட்டில் மன்னர்களாகவும் இருப்பார்கள். அனேகமாக காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் ( ஒரு சிலர் விதி விலக்குத்தான்..). தாம் காதலித்து திருமணம் செய்ததையே பெற்ற பிள்ளைகளிடம் மறைத்து பிள்ளையின் பட்டப் படிப்பு முடிந்தவுடனேயே எங்காவது கட்டிக் கொடுக்கவேண்டும் என்று கனவு காண்பவர்களும் உண்டு. காதலித்த பெற்றோர் தாம் விட்ட பிழையை தன் பிள்ளை விடக் கூடாது என்ற ஆதங்கம் என்று எடுத்துக் கொண்டாலும் தவறான அணுகுமுறை என்பது என் கணிப்பு.
மூத்தவள் கறுவலுடன் போய்விட்டாள் என்றாள் அடுத்தவள் ஒரு தெற்காசியனை கட்டினால் போதும் என்று திருப்திப் படும் பெற்றோரும் உண்டு. இவர்கள் ஊரில் சாதி பேதம் பேசியவர்கள் என்பது தான் உண்மை. தனக்கு வருகின்ற போது தான் வாழ்க்கையில் யதார்த்தம் புரிகின்றது. ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டாலும் நம்மவர் மத்தியில் இருக்கும் சவால்களையும் தீர்வையும் அடையாளம் காணமுடியாமல் தான் இருக்கின்றது. டாக்டர் பெம்பிளை, நன்றாய் சம்பாதிக்கும் பெம்பிளை வேண்டும் என்று அலைகின்ற கூட்டமும் உண்டு.கடந்த காலங்களில் கொண்டு திரிந்தவர்கள் பேச்சு திருமணத்தை மற்றவர்களின் வாயை மூட காதல் திருமணம் என்று சொல்லிக் கொள்பவர்களும் உண்டு.
எனக்கு ஒரு நண்பன் அழைத்து தனக்கு திருமணம் நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்றான். நானும் யார் அந்த கொடுத்து வைத்தவள் என்று கேட்க, ஒரு பெரிய மனிதர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரின் பேர்த்தி நல்ல ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கின்றாள் என்றான். அவனிடம் மேற்கொண்டு எந்தக் கேள்வியை முன் வைக்கவில்லை. நண்பன் அவளுடைய பெயரை முதல் சொல்லி அவளைப் பற்றி ஒரு சில வார்த்தை கூறியிருந்தால் நான் சந்தோசப் பட்டிருப்பேன். குடும்பப் பின்னணியையும் சம்பாதிக்கும் திறனையும் சந்தைப் படுத்தும் ஒரு முயற்சியாகவே எனக்கு தோன்றியது.
காமத்தின் பிரதிபலிப்பு தான் காதல் என்போரும், நட்பின் ஒரு பரிமாணம் தான் காதல் என்போரும் விவாதித்துக் கொண்டாலும், இந்த காந்தர்வ கவர்ச்சிக்கு காரணம் அறிய முடியாமல் தான் இருக்கின்றது. மேற்குலகில் வாழும் இளைஞர்களுடன் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எண்ணங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நண்பர்களைப் போல நடத்தினால் அவர்களின் முடிவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
மேற்குலகில் வாங்கும் அனேகமான பொருட்களுக்கு பாவித்து விட்டு தேவை இல்லை என்றால் 3 அல்லது 6 மாதத்தில் திருப்பிக் கொடுக்கலாம் என்ற ஓர் அணுகுமுறை உண்டு. இந்தப் பாதிப்பினால் காதலும் அப்படி ஒரு பொருள் என்று நினைத்து விடுகின்றார்களோ தெரியவில்லை. ஊரில் "சரக்கு" என்று இளம் பெண்களை அழைக்கும் வழக்கம் உண்டு, அதற்கு விளக்கமறிய வர்த்தக ஆசிரியரை கேட்ட போது " விற்பனைக்குள்ள பொருள் சரக்கு எனப்படும்" என்றார். இப்படி திருமணங்கள் இன்றும் ஒரு வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.
இக்கட்டுரை என் கண்ணில் பட்ட அல்லது கேட்டவற்றை அடிப்படையாக கொண்டது. உங்கள் பார்வையையும் தாருங்கள்.
November 28, 2008
மாவீரர் வாரம் - கனடா
புலம் பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் ஒரு முக்கிய நாடான கனடாவில் பல தடைகளின் மத்தியிலும் மிகவும் எழுச்சியாக மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப் படுகின்றன. இங்கு வாழும் இளையவர்கள் பல நெருக்கடியில் மத்தியில், சட்ட வல்லுனர்களின் அனுகூலத்தை பெற்று நடத்த எடுத்த கொண்ட இடத்தில் எல்லா பல்கலைக் கழக மாணவர்களும் ஒன்று சேர்ந்து வித்தாகி விட்ட வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்த இளையோர் பாரட்டப் பட வேண்டியவர்கள்!
வருடா வருடம் கார்த்திகை 27 நிகழ்வுகள் எழுச்சியின் உச்சக் கட்டத்தை வியம்பி நிற்கும் நிகழ்வுகளாகவே இருந்து வருகின்றன. இந்த முறை நிகழ்வும் மிகவும் எழுச்சியாகவும், அலை கடலாய் மக்கள் கூட்டம் காலை 6:00 மணியிலிருந்து கலந்து கொண்டார்கள். பல மக்கள் மண்டபம் நிரம்பி திரும்பி செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள். வாகனத்தரிப்புக்கள் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கைக்குழந்தைகளுடனும், தள்ளாடும் வயதில் முதியோரும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருந்தனர்.
மறைமுக காவல் துறையினரின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அவர்களும் தகவல் சேகரிக்கும் முயற்சியிலும் தம் தேவைகளுக்கு ஆவணப்படுத்துதலிலும் ஆங்காங்கே முயன்ற வண்ணம் இருந்தார்கள். இது தொடர்பாக துடுப்பான இளைஞர் ஒருவரிடம் வேற்றினத்தவரின் கலந்துரையாடிய போது ( கேட்ட சம்பவம்)
வேற்றினத்தவர்: எங்கு செல்கிறீர்கள்?
இளைஞன்: மாவீரர் நாளுக்கு
வேற்றினத்தவர் : எப்படி இது நடக்கின்றது என்று உமக்கு தெரிந்தது?, யாராவது அழைத்துச் சொன்னார்களா?
இளைஞன்: எனக்கு ஒருவரும் அழைத்து சொல்லவில்லை, கார்த்திகை 27 என்றால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவோம். இதற்காக நான் காத்திருந்தேன்.
வேற்றினத்தவர்: இங்கு யாராவது பணம் சேகரிக்கின்றார்களா?
இளைஞன்: எனக்கு தெரியாது, நான் என் நாட்டில் கஷ்ட்ப்படும் மக்களுக்கு கொடுக்க
விரும்புகின்றேன், உங்களுக்குத் தெரியுமா?
வேற்றினத்தவர்: இந்த நிக்ழ்ச்சியை நடத்துபவர் யார்?
இளைஞன்: எனக்குத் தெரியாது, அதை அறியத்தான் நீங்கள் வந்திருந்தால்
உள்ளே சென்று அறிந்து கொள்ளுங்கள் அது எனக்கு தேவையில்லாத தகவல்.
வேற்றினத்தவர்: நீங்கள் போகலாம்.
எது எவ்வாறு இருந்தாலும் மக்களின் மன நிலை அங்கு வந்திருந்த வேற்றினத்தினருக்கும் நிச்சயமாக விளங்கியிருக்கும்.
நிகழ்வுகளுக்கு சிகரம் வைத்தால் போல், "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லை போராடுமா" என்ற நாட்டிய நாடக நிகழ்வு நடந்தது.
நிகழ்வின் இறுதி நிகழ்வாக மக்களின் மனதை உருக்கி ஈழத்தில் இடம் பெயர்ந்து வாழும் மக்களின் மன நிலையயும், அவர்கள் கஷ்டத்தையும் வெளிப்படுத்தும் முகமாகவும் புலம் பெயர்ந்த மக்களின் பங்களிப்பின் தேவையை விளக்குமாக ஒரு எழுச்சி நாடகம் நடை பெற்றது.
உலகெல்லாம் நடந்த நிகழ்வுகளின் பெயர்கள் கொண்ட பதாதைகளுடன் இடம்பெயர்ந்தோருக்கு கைகொடுப்பதாக சித்தரித்திருந்தார்கள்.
போராளிகள் பூட்டை உடைக்க பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து கைகொடுக்க விடுதலை என்ற கதவு திறக்க ஈழ மாதா தோன்றுகின்றாள்.
மக்கள் இன்ப அதிர்ச்சியில் துள்ளிக்குதிக்கின்றார்கள்.
எல்லோர் மனதிலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் நாடகம் அமைந்திருந்தது. நாம் எல்லோரையும் இந்த குறிக்கோள் நோக்கி அழைத்து செல்ல வேண்டிய காலம். நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி எந்த பொழுதிலும் மக்களோடு இணையாமல் இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களையும் உள் வாங்க வேண்டிய காலம் இது.
மாவீரர் நிகழ்வு நினைவுப் படங்களை பார்க்க... ( நன்றி , நினைவுகள், செய்தி இணையம்)
November 22, 2008
எந்த வயதில் வாழ்க்கைத் துணை தேட...
பதின்மர் வயதில் பருவ மிடுக்கில் கிடைத்த உறவு வாழ்க்கைத்துணையாகி விடுமா?
பள்ளிப் படிப்பில் பக்கத்தில் இருந்து பகிடி பண்ணியவன்(ள்) வாழ்க்கைத் துணையா?
கடைசி வாங்கில் களிசறை என்று வாத்தி கடிந்து கொண்டதால் கொண்ட அக்கறையால் கடைசி நாளில் காதலாகி வாழ்க்கைத் துணையாகுமா?
படிப்பேறாது என்று சொல்லி துடிப்போடு சொல்லி தந்த நட்பு வாழ்க்கைத் துணையாகுமா?
கண் காணா இடத்தில் இருந்து கணணி அரட்டை செய்தவன் வாழ்க்கைத் துணையாகுமா?
வாழ்க்கைத் துணையாக இவன்/இவள் அமைந்து விடமாட்டார்களா என்று எம் வாழ்க்கைச் சக்கரத்தில் பல சந்தர்ப்பங்களில் எழத்தான் செய்கின்றன. இதில் எந்த வயதில் எம் எண்ணங்களுக்கு நாமாகவே ஒரு வடிவம் கொடுக்க முயல்கின்றோமோ அப்போது தான் உதயமாவது காதல் என்கிறார்களோ! இந்த எண்ணங்கள் வடிவம் பெறாமலே அழிந்துவிடுவது தான் அதிகம். இதற்கு எம் குடும்ப அமைப்பு, நண்பர்கள் உறவுகளின் அனுபவங்கள் எங்கள் எண்ணங்களை பாதிக்கின்றன.எனக்கு தெரிந்த அனுபவங்கள் சிலவற்றை கதாபாத்திரங்களின் பெயரை மாற்றி தருகின்றேன்.
அகிலன் ஒரு பொறியியல் மாணவன், அவனைக் கண்டால் ஜொள்ளு விடாத கல்லூரி மாணவி கிடையாது. இவன் ஒரு முற்போக்கு சிந்தனையுடையவன். கடைத்தெருவிற்கு போனால் கல்யாணமான பெண்கள் கூட அவனை சுகம் விசாரிக்காமல் போவது கிடையாது. பெற்றோர் வாழ்க்கைத்துணை தேடுவதில் இவனுக்கு முழும் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். நட்புகளுக்கு காதல் தூதுவனும் இவன் தான்.
ஆயினும் அகிலனுக்கு நிறைய தெரிவுகள் இருந்ததோ என்னவோ தனக்கு வாழ்க்கைத் துணை தேடுவதில் குழப்பம் தான். அவன் அடிக்கடி விதவைக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று சொல்வான். அவனுடைய சகோதர சகோதரிகள் எல்லோரும் காதல் திருமணம் தான். காலங்கள் ஓடின, கல்லூரி வாழ்க்கை முடிந்தது. வேலை தேட சென்னை வந்து தங்கினான். உணவுக்காக ஒரு யாழ்ப்பாணத்து குடும்பத்தினரிடம் வந்து பணம் கொடுத்து சாப்பிட்டு வந்தான். சாப்பாடு செய்து கொடுத்த அன்ரிக்கு பெடியனை பிடித்துப் போட்டுது. தன் குடும்பத்திற்குள் மாப்பிள்ளையாக்க எண்ணி தனது லண்டனில் இருக்கும் மகளின் படத்தை காட்டி அகிலனிடம் விருப்பம் இருந்தால் சொல்லச் சொன்னார். பெண் அழகாய் இருந்ததாலும் அன்ரியின் பண்பு பிடித்திருந்ததால் அவனும் லண்டன் பிள்ளையுடன் பேசிவிட்டு முடிவு சொல்வதாகச் சொன்னான்.
லண்டன் பிள்ளையுடன் பேசிய பின் திருப்திப் பட்டு சீதனம் எதுவும் வேண்டாம் என்று சொல்லித்தான் கல்யாணத்திற்கு உடன் பட்டான். அகிலனுக்கு புத்துணர்வு பிறந்து விட்டது. லண்டன் தொலைபேசி அழைப்பு வராதோ என்ற ஏக்கம் தான் எப்போதும், நாட்கள் செல்ல செல்ல லண்டன் மணமகள் அகிலனுடனான சம்பாசனை நேரத்தை குறைத்தாள். அகிலன் அழைத்தால் அவள் ஏதாவது நொண்டி சாட்டுச் சொல்லி தட்டிக் கழித்து விடுவாள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்த அகிலன் பேயறைந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். நண்பர்களிடம் தன்னிலையை சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டான். ஏன் அவளுடன் பேச வேண்டும் அவளுக்கு என்ன தான் தவறு செய்தேன் என்று என்னை புறக்கணிக்கின்றாள் என்பது அவனது புலம்பல். பெண்ணின் தாயாருடன் மனம் விட்டு பிரச்சனையை சொன்னான். தாய் மகளை தொலை பேசியில் அழைத்து என்னவென்று வினவ " சீதனம் இல்லாமல் ஒரு இஞ்சினியர் கல்யாணம் கட்ட வருவதால், அகிலனுக்கு ஆண்மை இல்லை என்று சொல்லிவிட்டாள்". தாய் ஆத்திரத்தில் போனை வைத்துவிட்டு " அவள் இனிமேல் எனக்கு பிள்ளை இல்லை தம்பி, உங்களைப் போய் தரக்குறைவாச் சொல்லிறாள், என்னை மன்னிச்சு போடுங்கோ, வெளி நாட்டுக்கு போய் அவள் இப்படி மாறுவாள் என்று எனக்குத் தெரியாது.
அகிலனின் நண்பர்கள் பெண்ணைப் பற்றி விசாரித்த போது தான் தெரிந்தது அவளுக்கு இலண்டனில் காதலன் ஒருவன் நீண்டகாலம் இருப்பதை. தனது காதலை மறைத்துக் கொண்டு இஞ்சினியர் மாப்பிள்ளை எடுக்க முற்பட்டு காதலினால் மனமாற்றப்பட்டு பின்பு பேசிய மாப்பிள்ளைக்கு டாட்டா காட்டிவிட்டாள்.
அகிலன் யாருக்கும் தீங்கு விளைவித்திருக்க மாட்டான். அவனுக்குள் ஒரு ஏமாற்றம். கல்லூரியில் எல்லோருக்கும் கதாநாயகனாக இருந்தவன் நிலை மிகவும் தர்ம சங்கடமாகிவிட்டது. திருமணம் செயவது என்றால் சீதனம் வேண்டித்தான் திருமணம் செய்வதாக முடிவெடுத்தான். அதே மாதிரி சீதனம் வேண்டித்தான் திருமணம் செய்தான். ஒரு காலத்தில் சீதனம் வேண்டக் கூடாது, விதவைக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்றவனின் வாழ்க்கைத் தெரிவு எப்படி மாறியது.
எந்த வயதில் காதலிப்பது என்பது முக்கியமல்ல, எந்தளவு புரிந்துணர்வு இருப்பதில் தான் தங்கியிருக்கின்றது. சின்ன வயதில் காதலிக்கும் போது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ குறுகிய தெரிவுகள் தான் கிடைக்கும், பின்னாளில் அந்த ஆணோ/ பெண்ணோ வெற்றி அடைவார்கள் என்று திட்ட வட்டமாக சொல்லி விடமுடியாது. ஆணோ பெண்ணோ வெற்றி பெற தவறினால் சில காதல்கள் முறிவடைந்து விடுகின்றன.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொன்னாலும் அனேகமாக ரொக்கத்தில் தான் நிச்சயிக்கப் படுகின்றன. கல்லூரி நாட்களில் கொண்டு திரிய பல காதல்கள் தோன்றினாலும், பண வருவாயை மனதில் வைத்து தான் இன்றைய அனேகமான வாழ்க்கைத் துணைகள் தேடப்படுகின்றன.
உங்களுடைய பார்வையையும் தாருங்கள்
November 17, 2008
உணவுப் பொருட்களை உபயோகித்து உருவங்கள்.
கிறிஸ்மஸ் விடுமுறை காலங்களில் சேகரிக்கப்படும் உலர் உணவுகளை உபயோகித்து சில உருவங்கள் கீழே!
இதை அழுத்தவும் எல்லாப் படங்களையும் பார்க்க..."
October 11, 2008
பழக்கமும் வழக்கமும்..
"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" என்று ஒரு பழமொழியில் சொல்லி இருந்தாலும் பழக்கம் என்பது நாம் வாழும் சூழல், பழகிய மனிதர்கள், கல்வி வாய்ப்புகள் போன்ற பல காரணிகளை கொண்டுள்ளது.
"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது " என்பர் சான்றோர். இங்கு ஒரு விலங்கினுடைய பழக்கம் கூட மாற்றப்படும் தனக்கு பாதிப்பு இருக்கும் என்று தெரிந்தால். மனித பழக்க வழக்கங்கள் மாற்றப் பட வேண்டுமாயின், அவனுடைய செய்கையால் அவனுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
நம்மூரில் வாழும் காலங்களில், நாம் மறைவாக ஒரு காரியம் செய்து விட்டு தப்பி விட முடியாது. நமது சுற்றத்தாரும் உறவுகளும் அறிந்து வீட்டுக்கு விடயம் வந்து விடும். மேல் நாடுகளில் வாழ்பவர்களுக்கு அப்படியல்ல. அதனால் தான் என்னவோ சில இளையவர்கள் தங்களுக்கு நிறைய சுதந்திரம் இருப்பதாக எண்ணி தங்கள் அடையாளங்களை தொலைத்து விடுவார்கள்.
ஒளவை கூட
" சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்த தொரு கல்வி மனப் பழக்கம்
தினமும் நடை நடைப் பழக்கம்
நட்பும் தயை கொடையும் பிறவிக்குணம்."
என்கின்றாள். ( கேள்வி ஞானத்தில் எழுதியது, வார்த்தை தவறுகள் இருக்கலாம்.)
என்னதான் பழக்கம் பலவற்றிற்கு காரணமாக இருந்தாலும், சில பிறவிக்குணங்களும் மனித இயல்பை ஆட்டி படைக்கின்றன.
வழக்கம் என்பது எதையும் ஆராயாமல் மற்றவர்கள் செய்வதைப் போல் செய்யும் முயற்சிகள். இந்த முயற்சிகளில் பல பழமை வாதங்கள் கலந்திருக்கின்றன. அதற்காக பழமை வாதங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் புதுமை வாதிகளாகி விட முடியாது.
நாம் நல்ல பழக்க வழக்கமாக வாழ விரும்பினால் " சகிப்புத்தன்மை, புரிந்துணர்தல், விட்டு கொடுத்தல் " போன்ற பண்புகளை வளர்க்க முயற்சிக்க வேண்டும். நான் தமிழ் நாட்டுக் கிராமங்களிற்கு சென்ற போது சில பழக்க வழக்கங்களை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. முகவரி தேடி குக்கிராமத்திலுள்ள ஓர் கொட்டிலில் இருந்த தேனீர்க் கடை சென்று வினவிய போது, தேனீர் அருந்திக் கொண்டிருந்த ஒரு முதியவர் என்னைப் பார்த்து முகவரியை கூறிவிட்டு " சார் ரீ சாப்பிறீங்களா!" என்று வினவினார். ஓரிரு நிமிட சம்பாசனையின் பின் என்னை ஒரு விருந்தினனாக நடத்திய விதம் என்னை நெகிழ வைத்தது.
நம்பிக்கையுடன் பழகுபவர்கள் தான் ஏமாற்றப்படுவார்கள், ஏமாற்றுபவர்கள் இன்னொருவரை தொடர்ந்து ஏமாற்றலாம் என்ற நம்பிக்கையுடன் பழகுவார்கள்.
பழக்க வழக்கத்தைப் பற்றிய உங்கள் பார்வையும் தாருங்கள்.
October 4, 2008
"இலங்கையில் தமிழரின் முழுமையான வரலாறு" நூல் வெளியீடு..
கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழரின் முழுமையான வரலாறு" நூல் வெளியீட்டு விழா "தகவல்" சஞ்சிகையின் ஆசிரியர் திருச்செல்வம் தலைமையில் ஸ்காபரோ நகர மண்டபத்தில் ( கனடாவில்) ஐப்பசி 3ம் திகதி வெள்ளிக்கிழமையில் நடைபெற்றது.
இரு குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரி மாணவியின் கனடிய தேசிய கீதம் என்பவற்றை தொடர்ந்து கனடிய தமிழர் சம்மேளனத்தின் இயக்குனர் ஒருவர் வரவேற்புரை வழங்கினார். அதை தொடர்ந்து ஆசிரியரின் பாடசாலை நண்பன் வேலா ஆசியுரை வழங்கினார். அவர் தன் உரையில் " ஆசிரியர் பாடசாலை நாட்களில் எவ்வளவு தூரம் வரலாறு சம்மந்தமான துறையில் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தது மட்டும் நின்றுவிடமால் அதன் துறை சார் கல்வி பெற்று அவுஸ்திரேலியாவில் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் இருந்தார். அந்த வேலையை துறந்து தன் குடும்பத்தையும் பிரிந்து பல மாதங்கள், வருடங்களை தமிழரின் வரலாறு பற்றிய தேடலை செய்தார்.
இதற்காக நம் நாட்டை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் ஆவணங்களை தேடி அதை மொழி பெயர்ப்பு செய்து பல சிரமங்களின் மத்தியில் தான் இந்த நூலை வெளியிட்டுள்ளார். இவர் தேசியத்தின் சொத்து என்று கூறும் போது அவை நிறைந்த கைதட்டுக்கள் அதன் உண்மைத் தனமை ஆமோதித்து நின்றது."
தலைவர் திருச்செல்வம் தனது உரையில், இப்படியான வரலாற்று நூல்கள் எழுதுவதிலுள்ள சிரமங்கள், நிதி தேவைகள் என்பவற்றை விளக்கி இந்நூலின் வெளியீட்டுக்காக 10,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸை வழங்கிய பேருக்கு பொருத்தமான அம்மையார் "கற்பகம்" அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இப்படியான நூல்களை எல்லோரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், புத்தகத்தை கடனாக தரமுடியாவிட்டாலும் பணத்தை கடனாக தர இங்கு நண்பர்கள் இருக்கின்றார்கள் என்று புத்தகத்தை வேண்டுவதற்கான உந்துதலை கொடுத்தார். நேரக்குறைவினால் தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து பேசிய நக்கீரன், நூல்களை ஆக்குவதிலும், சந்தைப்படுத்தல், மக்களை வாசிக்க வைத்தல் போன்றவற்றிலுள்ள சிரமங்களை நகைச்சுவையுணர்வுடன் தன் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார். ஆலயத்திற்கு தேர் செய்ய 35,000 டாலரை கொடுக்க முன் வருபவர்கள் இப்படியான நூல் வெளியீடுகளில் பங்களிக்க முன் வருகின்றார்களில்லை என்று தன் வருத்தத்தை வெளியிட்டார்.
ஆய்வுரை நிகழ்த்திய நவம், ஈழத்து இடம் பெயர்வினை விளக்கும் ஓர் கவிதையை வாசித்துவிட்டு ஆய்வுரைக்குள் சென்றார். பொதுவாக ஆய்வுரை செய்பவர் நூலை முழுதாக படித்து முடித்தததிற்கான தொனிப்பை கொடுப்பார்கள். நவமும் தனது பார்வையிலுள்ள கருத்துக்களை முன் மொழிந்தார். இந்த வரலாற்று நூல் எல்லோரையும் சென்றடைவதற்கான முயற்சியில் ( வேற்றினத்தவர் உட்பட) சில முயற்சிகள் செய்யப்படவில்லை என்று சில முன்னுதாரணங்களை முன் வைத்தார். பிரபல்யமான பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டிருந்தால் நிறைய மக்களை சேர்ந்தடைய வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கும். முன்னுரை, ஆய்வுரை போன்ற விளக்க உரைகள் வரலாற்று ஆசிரியர்கள் சிலரினால் தரப்பட்டிருந்தால் நூலுக்கு மேலும் சிறப்பு தந்திருக்கும் என்று கூறினார். புத்தகத்தில் ஒர் முத்திரை தலை கீழாக போடப் பட்டிருப்பதாகவும் சுட்டி காட்டினார். அத்துடன் நின்று விடாமல் புத்தகத்தில் ஆழமாக கையாளப்பட்ட விதம், எல்லோரும் படிக்கவேண்டிய முக்கியத்துவத்தையும் கூறி சேரனின் ஒரு கவிதையுடன் முடித்துக் கொண்டார்.
ஏற்புரை நிகழ்த்த வந்த ஆசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தனது ஏற்புரையில், ஆய்வுரை நிகழ்த்திய நவம் எழுப்பியிருந்த வினாக்களுக்கு விளக்கம் தந்தார். புத்தகத்திலுள்ள எல்லா விடயங்களுக்கும் தான் தன்னுடைய கருத்துக்களையே முன் வைத்ததாகவும், தன்னுடைய பதிப்பகத்தில் தான் பதிவு செய்ததாகவும் சொன்னார். நாம் எம்மில் நம்பிக்கை வைக்கவேண்டும் கேம்பிற்ட்ஜ் பதிப்பகம் போன்ற பெரிய பதிப்பகங்களை நம்பித்தான் நாம் எம் நூலை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இருக்கக் கூடாது. காலனித்துவ ஆட்சியில் வாழ்ந்த மனப்பாங்கு தான் எங்களை அப்படி சிந்திக்க வைக்கின்றது என்று விளக்கமளித்தார்.
முத்திரை தலைகீழாக முதற் பிரசுரத்தில் இருக்கும் தவறை அடுத்த பிர்சுரத்தில் சரி செய்து கொள்வதாக கூறினார்.
ஈழத்தமிழனின் வரலாற்று பின்னணியல் அனுராதபுரம், கதிர்காமம், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி எல்லாம் தமிழனின் ஆட்சியில் இருந்ததாகவும், நம்மினம் நமது நிலச் சொத்துக்களின் உறுதியை பாதுகாப்பாக பூட்டிவைத்து ஓரங்குலம் நிலம் கூட மற்றவர்களிடம் சென்று விடக்கூடாது என்று ஆயுதம் எடுத்து அடிபட்டுக் கொண்ட சமுதாயம் இப்போது தன் நாட்டை பறிகொடுத்து விட்டு நிற்கின்றது தன் நாடு என்று தெரியாமல்.
தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரத்தை தான் சந்தித்த போது, அவரிடம் , அமிர்தலிங்கத்தின் மறைவின் பின்னணியில் புலிகள் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள் அதனால் உங்களுக்கு அவர்களின் தலைவர் மீது கோபம் இல்லையா என்று வினவிய போது, தேசியத் தலைவர் ஒருவர் தான் எந்த சந்தர்ப்பந்த்தத்திலும் விலை போகாத தலைவன் என்று சொன்னதாக கூறினார்.
வீட்டுக்காரன் வெளியிலிருந்து வரும் நாய்க்கு சாப்பாடு போட்டாலும், வீட்டு நாய் அதனை சாப்பிட விடாமல் கலைக்குமாம். வெளி நாய் சொல்லிக் கொள்ளுமாம் எம் இனத்திற்கு நம் இனமே எதிரி என்று சுவாரசியமாக எமது இன்றைய நிலைமையை விளக்கினார்.
கெலிகொப்டரில் மணமகன் அல்லது மணமகளை அழைக்கின்ற வரைக்கும் புலம் பெயர்ந்த தமிழன் சென்று தன் பணத்தை விரயம் செய்கின்றான். அங்கு குண்டு மழைக்குள் தவிக்கும் மக்களுக்கும் அங்கு தன்னுயிரை தியாகம் செய்யும் போரளிகளையும் ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள் என்று உணர்வு ததும்ப பேசினார். புத்தகம் குறைந்த விலையில் பிரசுரிக்க விரும்பி இந்தியா சென்று அங்கு அவர்கள் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்கள். அதன் பின் ஜேர்மனில் தான் புத்தகம் பிரசுரிக்கப் பட்டதாம்.
அவர் உரை மிகவும் சுவாரசியமாகவும், தகவல்கள் நிறைந்ததாகவும், உணர்பூர்வமாகவும் இருந்தது. தனது புத்தகம் விற்பதற்கு நேரம் இல்லாவிட்டாலும் தான் இந்த சந்தர்ப்பத்தில் தனது உரையை முழுதாக வைக்க வேண்டும் என்று முயன்றார். நேரப் பற்றாக் குறையினால் தொடரமுடியால் நிறுத்திக் கொண்டார். தலைவர் போதும் என்ற மன நிலையில் வீடு செல்வதை விட, இன்னமும் வேண்டும் என்ற மன நிலையில் விடை பெற்றால் தான் சிறப்பு என்று சொல்லி வந்திருந்தவர்களை தேற்றினார். வானம் பாடிகளின் மூத்த பாடகர் நம்மூரையும் தலவரையும் வாழ்த்தும் இரு பாடல்களை பாடி சென்றார். புத்தகங்கள் ஆங்கிலம், தமிழ் என்ற இரு மொழியிலும் விற்பனைக்கிருந்தன. நல்ல ஒரு நிகழ்வில் கல்ந்து கொண்ட ஒரு திருப்தி எனக்கு ஏற்பட்டது. புத்தகத்தை வாசித்து விட்டு மீதியை சொல்கின்றேன்.
September 29, 2008
கனடிய தமிழ் வானலைகள் ஒரு குடையில் ஒன்றாகின....
கனடிய தமிழ் வானலை நிலையங்கள் ஒன்று சேர்ந்து வன்னியில் வாடி நிற்கும் உடன் பிறப்புக்களுக்காக CARE என்ற சுய லாபமற்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட துயர் துடைக்கும் நிதி சேகரிக்கும் வைபவம் ஆவணி 27 & 28 திகதிகளில் நடை பெற்றது.
கனடிய தமிழ் மக்களுக்கு இது ஒரு முக்கிய நிகழ்வாகவே இருந்தது. தேசியத்தை நேசிக்கும் எல்லோரும் ஒருமித்த குரலில் குரல் கொடுக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். எது எவ்வாறு இருப்பினும் வானொலிகள் சேவை செய்யும் நிறுவனங்கள் என்று சொன்னாலும் இதுவும் ஒரு வியாபார முயற்சி என்பதிற்கு மறுப்பதற்கு இல்லை. கலந்து கொண்ட நேயர்கள் பலர் ஆரோக்கியமான கருத்துக்களை பகிந்திருந்தனர்.
கனடிய தமிழ் பொது நிறுவனங்கள் அனைத்தும் தமிழ் வானொலிகள் எல்லாவற்றிற்கும் தமது தகவல்களை தர வேண்டும். எந்த ஒரு வானொலியும் தாம் தான் தேசியத்தின் வானொலி என்று மக்களை குழப்புவதை விட்டு, வானொலிகள் அனைத்தும் தேசியத்திற்கான வானொலிகள் என்ற எண்ணப்பாடுகள் இருக்க வேண்டும். தேசியத்திற்கான நிகழ்வுகள் அனைத்து வானொலிகளிலும் எடுத்து வரப் படவேண்டும். இது போன்ற பல கருத்துக்கள் மக்களால் முன் வைக்கப்பட்டிருந்தன.
CTR,GTR,MTR,ITR,TTR,CTBC, Tamilstar ஆகிய 7 வானொலி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலில் வன்னியில் அடிப்படை வசதிகளே இல்லாமல் அல்லலுறும் மக்களின் துயர் துடைக்க ஒலித்து கொண்டிருந்தனர். இது போல் ஒற்றுமை தொடர வேண்டும்.
தமிழ்ச்சோலை வானொலி அறிவிப்பாளர் நிகழ்வுகளை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். பல தமிழக உணர்வாளர்கள் வானலைகளில் கலந்து கொண்டு தம் உணர்வுகளை பகிர்ந்திருந்தார்கள். தேசியம் தம் தேவைகளுக்காக யாரையும் அணுகலாம், ஆனால் மாறாக, தேசியத்தை பாவித்து யாரும் தம் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்க கூடாது. மக்கள் தற்பொழுது விழிப்பாகவே இருக்கின்றார்கள்.
எம்மக்களின் அவலக்குரல் தமிழகத்திலும் கேட்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது. இன்று எல்லோரும் மொழியினால் இணைய வேண்டிய காலம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நன்மையாக நடக்க நாம் எல்லோரும் முயற்சிக்க வேண்டும். பிரிவுகளை உருவாக்கி சுயலாபம் தேடுபவர்களை மக்கள் இனம் காண வேண்டிய காலம் இது.
எமது வரலாற்று கடமையை தொடர்ந்து செய்ய நாம் மறந்து விடக்கூடாது. கையேந்தி நிற்கும் நம் உறவுகளுக்கு உரிமையுடன் கை கொடுத்து காப்பாற்ற வேண்டியது எம் கடமை.ஐப்பசி மாதம் 5ம் திகதி (2008) வரை CARE நிறுவனம் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மேலேயுள்ள "சுமை தாங்கி" பிரசுரப் படத்திலுள்ள முகவரியுடன், உலகத்தின் எம் மூலையிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம்.
September 28, 2008
கனடிய தமிழ் இளையோரின் உண்ணா நோன்பு.
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 21ம் ஆண்டு நினைவு நாளில் ஆரம்பித்த 30 மணி நேர உண்ணா நோன்பை மறு நாள் இரவு 10 மணியளவில் மிகவும் உணர்ச்சி தழும்பும் ஒரு நிகழ்வாக நடத்தி முடித்தார்கள். இந்த நோன்பு பல இளையோரின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஒரு முக்கிய நிகழ்வாகவே நான் கருதுகின்றேன்.
பல மேடைகளை கண்ட, அரசியல் ஆய்வுகளை தந்தவர்களை விட இந்த கனடிய தமிழ் இளையோரின் கருத்து பரிமாற்றம், உண்மையான உணர்வு பூர்வமானவையாகவே இருந்தது. பலரின் கண்களை கலங்க வைத்தது என்பது மறுக்கமுடியாத ஒன்று.
உண்ணாவிரதம் ஆவணி 26ம் திகதி பிற்பகல் 4:00 மணிக்கு கனடா ரிச்மண்ட் பிள்ளையார் மண்டபத்தில் ஆரம்பித்தது. 40 மேற்பட்ட இளையோருடன், வயதால் முதிர்ந்தாலும் உணர்வுளால் என்றும் இளமையாக இருப்பவர்களும் கலந்து இருந்தனர். தண்ணீர் மாத்திரமே உட்கொண்டு இருக்கும் விரதமாக முயற்சி எடுக்கப்பட்டிருந்தாலும், பல இளையோர் தண்ணீர் கூட அருந்தாமல் இந்த விரதத்தில் ஈடுபட்டிருந்தது அவர்களுடைய உணர்வு பூர்வமான ஈடுபாட்டை வெளிக்காட்டியிருந்தது. ஒரு சிலர் மௌன விரதமும் செய்தார்கள். இவர்களை ஊக்குவிக்க பலர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் இறுதி மணி நேரங்களில் "தாய் மடி காப்போம்" என்றும் முழங்கி நிற்கும் வானம் பாடிகள் உணர்ச்சி பாடல்களை பாடி நிகழ்வுக்கு மேலும் மெருகேற்றியிருந்தனர்.
வன்னியில் இருக்க இடமில்லாமல், குடிக்க குடிகூட நீர் இல்லாமல், அடிப்படை வசதிகளே இல்லாமல் அல்லல்படும் மக்களுக்காக இளையோர் பலர் தம் உணர்வுகளை பகிர்ந்து, பேசுவதுடன் நின்று விடாமல் தொடர்ந்து தமிழ் மக்களை ஒன்றிணைத்து உதவிகள் சென்றடைய செய்கிறார்கள்.
இளையவள் ஒருத்தி தன் நினைவுப் பகர்வில் தன்னுடைய வன்னிப் பயணத்தையும், தான் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பயணத்தையும் அங்கு வந்திருந்தவர்களின் மனதில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில், இளையவரின் பங்கு ஏன் முக்கியமானது, பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விளக்கியிருந்தாள். யோர்க் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய மாணவர் தலவனும் நிகழ்வில் வந்து வாழ்த்தி சென்றிருந்தார்.
மேற்குலக அரசியல் தலவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. அவர்கள் எம்மை வைத்து ஆதாயம் தேடும் தளங்களாகவே அனேகமான நிக்ழவுகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இது தேர்தல் காலமும் கூட. இளைவர்களின் இந்த முன்னுதராணம் மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டிய காலம் இது.
இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்து வாழ்போர் மத்தியில் கலந்து கொண்டவர்களின் பங்களிப்பு குறைவானதாக இருந்தாலும் இது ஆரம்பம் முடிவல்ல என்பதால், வரும் காலங்களில் உலகளாவிய தமிழ் மக்களின் பங்களிப்பு இந்த விடியலை தேடி நிற்கும் மக்களுக்காக கைகோர்க்கும் என்று நம்புவோமாக!
September 16, 2008
என் மண்ணின் பயண நினைவுகள்..
அடுக்கடுக்காய் அந்தம் எல்லாம் அகதியாகி இடம் பெயர்ந்து வாழும் ஈழத்தாரில் நானும் ஒருவன். ஆண்டுகள் பலவற்றை ஆங்கிலம் பேசும் நாட்டில் கடத்தி விட்டு பெற்றவர்களையும் உற்றவர்களையும் பார்க்க என் பிறந்த மண்ணிற்கு ஓர் திடீர் பயணம் செய்தேன். எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்த பயணம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பயணமாகவே இருந்தது.
21 ஆண்டுகளின் பின் நான் வாழ்ந்த மண்ணிற்கு செல்கின்றேன் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், வெள்ளை வான் மிரட்டல், மற்றும் எந்த இடத்திலும் சுற்றி வளைப்புக்கள் என்ற செய்திகள் ஒரு மூலையில் எனக்கு மனப்பழுவை ஏற்படுத்தத்தான் செய்தன. வாழ்க்கையில் பல சோதனைகளை சிறிய வயதிலேயே சந்தித்த அனுபவம் இருந்ததால் நான் நினைத்த மாதிரி பயணத்தை ஆரம்பித்து கொழும்பை அடைந்தேன்.
கொழும்பிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு யாழ்ப்பாணம் செல்வதற்கு விமானச் சீட்டு பெறுவதற்காக சிங்களம் சரளமாக பேசக் கூடிய சகோதரர் ஒருவருடன் சென்றேன். அங்கு நான் பார்த்த அலுவலக அனுபவம் ஆண்டுகள் பல மாறினாலும், அதிகாரி எல்லோரின் முன் தனக்கு கீழ் வேலை செய்பவரை பேசுதல், பயணிகளிடம் நடந்து கொள்ளும் முறை நாம் என்னும் வளர வில்லையோ என்று எண்ணத் தோன்றிற்று. ஆயினும், நான் வெளி நாட்டவன் என்பதால் சற்று பதுமையாகவே நடத்தினார்கள். பக்கத்திலிருக்கும் சென்னைக்கு போவதை விட யாழ்ப்பாணத்திற்கு போகும் விமானக்கட்டணம் அதிகம்.
ஒரு நாளுக்கு 3 விமானச்சேவைகள் மாத்திரமே, எனக்கு இரண்டாவது விமானம். ஆயினும் காலை 7:30 மணிக்கே புறப்பட்டு விமான சேவை நிறுவனத்திற்கு சென்றோம். அங்கு எல்லோரும் தங்கள் வருகையை பதிவு செய்து, கைத்தொலைபேசி, புகைப்படக் கருவிகள், ஒளிப்படக்கருவிகள் எல்லாம் கையளிக்கவேண்டும். அங்கிருந்து 9:00 மணிக்கு அவர்களின் பேருந்து வண்டியில் இரத்மலானை விமான நிலையத்திற்கு கிளம்பியது. 09:30 மணி அளவில் விமான நிலையத்திற்குள் செல்லும் சோதனைச் சாவடியில் இறக்கப்பட்டோம். அங்கு ஒரு மணி நேரம் காக்க வைக்கப்பட்டோம். பின் ஒருவர் ஒருவராக அழைக்கப்பட்டு நாமும் எமது பொதிகளும் சோதனைக்குள்ளாகின. 11:30 மணியளவில் ஒரு சிறிய பேரூந்தில் இராணுவ சிப்பாய் ஓட்டுனர் எங்களை விமான நிலையத்தில் இறக்கிவிட்டார். அங்கு மீண்டும் இலத்திரனியல் உபகரண சோதனையின் பின் பொதிகள் கையளிக்கப்பட்டன. சுமார் 12:15 மணியளவில் விமானம் புறப்பட்டு 1:25 மணியளவில் பலாலி விமானத்தளத்தை அடைந்தது. அங்கிருந்து முழுக்க மறைக்கப்பட்ட, காற்று குறைவான இராணுவ பேருந்தில் ஏற்றப்பட்டு ஒரு பதிவு நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டோம். எல்லோரையும் தனித்தனியாக இராணுவத்தினர் படம் எடுத்து செல்லும் முகவரிகள் பதிந்தார்கள். பின்பு அங்கிருந்து விமான சேவை நிறுவனத்தினரின் பேருந்தில் யாழ்ப்பாணம் சென்றோம்.
அங்கிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனத்தில் கோப்பாய், இருபாலை, நீர்வேலி ,புத்தூர், வல்லை(2) சோதனை சாவடிகளை கடந்து எனது வீட்டை அடைந்தேன்.
சில நினைவுப்படங்கள்
இது ஒரு நினவு கட்டிடம். முதல் கரும்புலி மில்லரால் நெல்லியடி இராணுவமுகமாக இருக்கும் போது தாக்கப்பட்ட இடம் தற்போது மீண்டும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயமாக திகழ்கின்றது.
வல்லிபுரக்கோவில்
நல்லூர் கோவில்
யாழ் பல்கலைக்கழக நூலகம்.
யாழ் பல்கலைக்கழக வளாகம்
சந்நிதி கோவில்