November 24, 2007

கார்த்திகை தீபம்.

மண்ணின் மைந்தர்களுக்கான கார்த்திகை தீபம்.

இங்கு கீழே தரப்பட்டுள்ள தொடர்புக்கு சென்று ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் தீபம் ஏற்ற வேண்டுகின்றேன். உங்கள் தளங்களிலும் இதற்கான இணைப்பை கொடுத்து ஒற்றுமையாக உலகத்தமிழ் உள்ளங்களின் உணர்வுகளை ஒன்று படுத்துங்கள்.







Read more...

October 21, 2007

சிறிய கனவு நனவானது...

வாழ்வியலில் இளமை ஒரு மறக்கமுடியாத பருவம். எந்த கனவையையும் நனவாக்க துடிக்கும் ஒரு மிடுக்கு கொண்ட பருவம். இந்த இளமைப் பருவத்திலும் எல்லா விருப்பு வெறுப்புக்களையும் ஓரம் கட்டி விட்டு விடுதலை எனும் வேட்கையில் இணைந்து சுதந்திரத்திற்காக போராடும் ஈழத்து இளையவர்கள் பலர்.

மனித வாழ்வியலில் உடல், மனம், உயிர் (ஆன்மா) இவை மூன்றும் இணைக்கபட்டு இருந்தால் தான் அவன் மனிதன் எனப்படுவான். உடல் உணவுக்காகவும், உயிர் அன்புக்காகவும், மனம் அறிவுக்காகவும் தேடிக் கொண்டே இருக்குமாம்.

கிணற்றுத்தவளையாக வாழ்வோருக்கும், உணவும், அன்பும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும். அறிவு என்பது கிடைப்பதற்கு கல்வி வாய்ப்பு , சூழ இருக்கும் சமூகம், பல்வேறுபட்ட மனிதரின் சந்திப்புக்கள் போன்றவை தேவையாகிவிடுகின்றது.

தகவல் தொழில் நுட்பம் என்று சொன்னால் அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று எல்லோருக்கும் தெரியும். அறிவை மூலதனமாக்கி இந்த நகரில் வாழுகின்ற‌ ஈழத்து இளைஞர்களின் முயற்சியையே இங்கு தருகின்றேன்.


இந்த நகரில் இருந்து கொண்டு "சர்வதேச தமிழ் தொழில் நுட்பவியலாளர் கழகம் ( ITTPO - International Tamil Technical Professional Organization) என்ற சமூக நோக்குடைய நிறுவனத்தை 2002ம் ஆண்டு நிறுவி, ஈழத்திலிருப்போருக்கும் தொழில் நுட்ப அறிவை கொடுப்பதற்கு வழி தேடினார்கள்.
அமெரிக்கர்களுக்கு ஒரு M.I.T ( Massachusetts Institute of Technology) போல, இந்தியர்களுக்கு ஒரு I.I.T ( Indian Institute of Technology) போல, ஈழத்தவர்களுக்கு ஒரு V.I.T( Vanni Institute of Technology) ஆரம்பிக்க திட்டம் போட்டார்கள்.




கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கனடிய தமிழ் வானொலியில் "மின் கணணி உலகம்" என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியுள்ளேன். வேலைப் பழுவினால் இப்பொழுது செய்ய முடியவில்லை. 2002ம் ஆண்டு "வன்னி ரெக்" என்ற திட்டத்தை பற்றி ஒரு பேட்டி நிகழ்ச்சியை தயாரித்திருந்தேன். சுமார் 5 வருடங்களின் பின், இந்த வெற்றி பெற்ற இத்திட்டத்தினை உங்களுக்காக கொண்டு வருகின்றேன்.

5 வருடங்களுக்கு முன்பு......

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்:

உதயன் : இலங்கை வானொலியில் பயிற்சி பெற்று, முழு நேர வானொலி அறிவிப்பாளனாக கனடாவில் இப்போதுமிருக்கின்றார்.
திவாகரன் : கணணிவல்லுனர், எனது தயாரிப்பில் உதவியாளர்.
காரூரன் ( இது எனது புனை பெயர்):‍ ‍‍ நிகழ்ச்சி தயாரிப்பாளர்.

பங்குபற்றியோர் :

1. ஜெ. குமாரசூரியர்

பல வருடமாக அமெரிக்க மண்ணில் வாழ்ந்து வருபவர். Electrical Engineering பட்டதாரியான இவர். கணணி துறையில் பல வருடமாக வேலை செய்து வருகின்றார். வன்னி ரெக் என்ற எண்ணத்திற்கு வித்திட்டவர். ஒரு வருடத்திற்கு மேலாக வன்னி மண்ணில் இருந்து இந்த திட்டத்தை வழி நடத்தியவர்.

2. விமல் ராஜ்கோபால்

இவரும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் பல வருடமாக மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர். தற்பொழுது ஒரு மென்பொருள் தயாரிப்பு முகாமையாளராக இருக்கின்றார். வன்னி திட்டத்திற்கு "ஜெ"இற்கு உதவியாக உள்ளவர்.

3. நவா நவரூபராஜா

இந்தியாவில் IIT- Chennai - பொறியியல் துறையில் கல்வி கற்று பின் California Berkeley பல்கலைக்கழகத்தில் கணணி துறையில் முது நிலை பட்டம் பெற்று HP நிறுவத்தினத்தில் Architect ஆக இருக்கின்றார். எனது பாடசாலை தோழன்.


இந்த பேட்டி 2002ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த பேட்டியின் ஒரு சில பகுதிகளை எழுத்துருவத்தில் கீழே தந்துள்ளேன்.

காரூரன் (CTR): வன்னி டெக் திட்டம் என்றால் என்ன?

நவா நவரூபராஜா:
ஈழத்தில் அமைதி உடன் படிக்கை ஏற்பட்டு பல தரப்பட்ட முயற்சிகள் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஈழத்தை கட்டி எழுப்பும் பணிகளில் பலரும் ஈடுபட்டுள்ளனர். இதே நேரத்தில் எமது மக்கள் பலவற்றை இழந்து, அவர்கள் தொழில் நுட்ப அறிவில் 20ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அமைதியை கட்டி எழுப்பி, மக்களை முன்னேற்ற வேண்டுமாயின் ,இவர்களை உலக அளவாகிய மக்க‌ளுடன் நாம் சரிசமமாக கொண்டு வரவேண்டும். இந்த போட்டியான உலகத்தில், அது மட்டுமல்ல மற்றவர்களுடன் வாழ வேண்டுமாயின் நாங்கள் எங்கள் மக்களை மற்றவர்களை விட இந்த தொழில் நுட்ப துறையில் முன்னுக்கு கொண்டு வரவேண்டும். இந்த தார்மீக கடமை, புலம் பெயர்ந்து வாழும் எல்லா தமிழ் மக்களுக்கும் உண்டு. அந்த நடவடிக்கையை நாங்கள் செய்ய வேண்டுமாயின் எமது மக்களுக்கு தொழில் நுட்பம் சார்ந்த கல்வி அறிவினை கொடுக்க வேண்டியது அவசியாமாகி விடுகின்றது. அந்த கல்வி அறிவினை புகுத்தினால் அதை தொடர்ந்து வரும் பொருளாதார புரட்சி மூலம் எமது மக்கள் நிச்சயமாக முன்னுக்கு வரலாம். இவ்வளவு காலம் நாம் எமது உரிமைகள் பலவற்றிற்காக போராட்டம் போன்ற நடவடிக்கையில் போராடினோம். இனி வரும் போராட்டங்களை எமது பொருளாதார மறுமலர்ச்சிக்காகவும் எடுத்து செல்ல வேண்டிய நிர்ப்பந்த்தத்தில் உள்ளோம். இப்படியான நிலையில் பல திட்டங்களை உடனடியாக செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றோம். இப்படியான நிலையில் சிலிக்கன் பள்ளத்தாக்கு உள்ள பலர் ஒன்று சேர்ந்து ஜெ. குமாரசூரியர் தலைமையில் வன்னி ரெக் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. உயர் தொழில் நுட்பத்தை எடுத்து செல்வதற்கு எடுத்து செல்லும் திட்டம். இதில் பல தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற வெளி நாடுகளில் வாழும், பல தொழில் நுட்ப வல்லுனர்களை உள்ளடக்கிய முயற்சி தான் இது. இந்த முயற்சியை பற்றி "ஜெ" அவர்கள் மேலும் விரிவாக கூறுவார்கள்.


ஜெ. குமாரசூரியர்:

ரூபன் மிகவும் அழகாகவும் விரிவாகவும் கூறினார். இதை நான் கொஞ்சம் விரிவாக சொல்வதாக இருந்தால், வன்னி இன்சிடிடியூட் ஒஃப் ரெக்னொலயி என்ற கல்லூரியை நிறுவுவதை தான் வன்னி ரெக் என்று அன்பாக அழைக்கின்றோம்.
ஈழ தமிழ் மக்களின் உயர் தொழில் நுட்ப இடைவெளியை நிரப்புவதற்கு அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இது. இன்றைய சமாதான சூழ் நிலையில், எமது மக்களின் அரசியல் நிலைமைகள் தீர்க்கப் படுமாயின், எமது தாய் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவையும் பொறுப்பும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களினதும், தாயகத்தில் வாழும் மக்களின் பொறுப்பு. அங்கு நடந்த போரினால் எமது மக்களின் வாழ்க்கை தர நிலைமைகள் பின் நோக்கி நகர்த்தப்பட்டது மாத்திரம் அல்ல, இன்று சமாதான நிலைமைகள் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை தரத்தையோ அல்லது கல்வி தரத்தையோ திடமாக முன்னோக்கி கொண்டு வர பல வருடங்கள் ஆகலாம். ஆனால், இந்த பல வருட‌ங்களாகி விடும் முயற்சிகளை சில வருடங்கள் ஆக்குவது உலகெல்லாம் பரந்து வாழுகின்ற புலம் பெயர்ந்த மக்களாகிய எங்களுக்கு உண்டு.

அது ஒரு புறமிருக்க , நம்மவர்களில் பலர் வெளி நாடுகளில் உயர் தொழில் நுட்ப துறைகளில் வல்லுனர்களாகவோ கைதேர்ந்தவர்களாகவோ பல நாடுகளில் வாழுகின்றார்கள். இவ்வாறு நிலைமைகள் இருந்தாலும் தாயகத்தில் நம்மவர் இந்த தொழில் நுட்பத்தில் பின்னோக்கி தான் இருக்கின்றார்கள். இந்த பிரச்சனையும் அதற்கான தீர்வும் எம்மிடமே இருக்கின்றது. பல நாடுகளில் வாழும் உயர் தொழில் நுட்ப துறையில் வாழுகின்ற வல்லுனர்களையும் அவர்களது நண்பர்களையும் ஒன்று சேர்த்து அவர்களின் கூட்டு மொத்தமான அறிவை ஒன்று சேர்த்து அங்குள்ளவர்களுக்கு எடுத்து செல்லும் முயற்சி தான் இது. அங்குள்ள மக்களின் திறமையை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை, அவர்களுக்கு ஒரு வழிகாட்டி தான் முக்கியமாக தேவைப்படுகின்றது.



திவாகரன்(CTR):
அழகாக திட்டத்தை பற்றி கூறினீர்கள். இந்த வன்னிதிட்டத்தை நடைமுறைப் படுத்த என்ன செய்ய வேண்டும்?

ஜெ. குமாரசூரியர்:
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற முயற்சியை , முதலில் உலகத்தில் உள்ள எல்லா தமிழ் தொழில் நுட்ப வல்லுனர்களை ஒரு அமைப்புக்கு கீழ் கொண்டு வர எண்ணி International Tamil Technical Professional Organization (ITTPO) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். எல்லா நாடுகளிலிருந்தும் வல்லுனர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். வன்னியில் ஒரு உயர் தொழில் நுட்ப கல்லூரி ஆரம்பிப்பதே எங்கள் நோக்கம்.

உதயன்(ctr)

இந்த முயற்சிக்கு வெளி நாட்டு தமிழர்களிடம் எவ்வளவு வரவேற்பு இருக்கின்றது?

ஜெ. குமாரசூரியர்:

ஆம், தமிழில் சொல்வதனால், பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

காரூரன்:

நல்ல விடயம். எந்த ஒரு முயற்சிக்கும் ஆயத்தங்கள் தேவை. இதை செய்ய வேண்டிய இடத்தில் செய்ய கூடிய அனுகூலங்கள் இருக்க வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஈழத்திற்கு சென்றிருந்தீர்கள். அப்போது யார் யாரை சந்தித்தீர்கள், எப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தன என்று எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஜெ. குமாரசூரியர்:


நிச்சயமாக! இந்த வன்னி ரெக் ஆரம்பிப்பது தொடர்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பிதற்காகவும், இந்த பாடசாலையின் தேவை, அங்குள்ள மாணவர்களின் படிப்பறிவு, பாடசாலையை இயக்க கூடிய சூழல் போன்றவற்றை ஆராய்வதற்காக கடந்த மாதம் வன்னிக்கு ஒரு பயணம் செய்திருந்தேன். 3 வார காலத்தில் நான் பல தலைவர்களையும் மக்களையும், அறிஞர்களையும் சந்தித்து உரையாடி வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். அந்த அறிக்கையில் வன்னி ரெக் ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் கூறியுள்ளேன். இக்கல்லூரி ஆரம்பிப்பதற்கான ஒரு தற்காலிகமான இடத்தையும் தெரிவு செய்துள்ளேன். தற்போது அதற்கான ஆயத்தங்களை செய்த வண்ணம் உள்ளோம். மீண்டும் தை மாதம் வன்னி செல்வதாக உத்தேசித்துள்ளேன்.

அங்குள்ளவர்கள் இந்த கல்லூரியை எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கும் படி கேட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்ன தெரியாது என்பதை அறிந்தே இருக்கின்றார்கள். எவ்வளவு தெரியாது என்பதை தெரிந்து வைப்பது அவசியம், அது அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது.

உதயன்(ctr)

அதே வேளை, இந்த விடயமாக பல்கலைக்கழக மாணவர்களை, பாடசாலை மாணவர்களை சந்தித்திருப்பீர்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் எப்படி?


ஜெ. குமாரசூரியர்:

ஆம், பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தேன். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தேன், குறிப்பாக அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை சந்தித்து உரையாடிய போது, மிகவும் ஆர்வாகமாக இருந்தார். தாய்லாந்திற்கு பேச்சு வார்த்தைக்கு செல்வதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையிலும் என்னுடன் நேரத்தை ஒதுக்கி சந்தித்தது எவ்வளவு இந்த திட்டம் எவ்வளவு முக்கியம் பெறுகின்றது என்பதை உணர்ந்து கொண்டேன்.

மேலும் இந்த பேட்டியை அறிய வேண்டுமாயின் கீழே இருக்கும் ஒலிப்பதிவைக் கேட்கவும்.




மேலே தரப்பட்ட பகுதி திட்டத்தை ஓரளவு அறிமுகப்படுத்தியிருக்கும் என்று நம்புகின்றேன். இந்த திட்டத்தில், பாடத்திட்டம் தயாரித்தல் மற்றும் சில முயற்சிகளில் உதவியாக இருக்க வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

இன்று வன்னிரெக் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது.


கிராமிய மணம் வீசும் வன்னிரெக் Cafe

வன்னிரெக் cafe உள் பகுதி

கணணி வண்டி??


கூடிப் படிப்பதற்கு இதுவன்றோ இடம்!

விடுதிக்கு வழி

இரும்புக் குதிரைகள் ஓய்வெடுக்கின்றன!


அறிவுக்கான தேடல் ஆவலுடன் !

கனடிய மண்ணில் இருந்து சென்ற பாலா விரிவுரை வழங்குகின்றார்.


இந்த படங்களை பாலா எடுத்து தந்திருந்தார். எல்லோரும் பாலா அண்ணை என்று செல்லமாக அழைப்பார்கள். தேசியத்துடன் தன்னை இணத்திருக்கும் நட்புகளில் இவரும் ஒருவர்.
இந்த வன்னி ரெக்கை பற்றி மேலும் அறிய வேண்டுமாயின்,
Vanni Institute of Technology

அல்லது International Tamil Technical Professional Organisation இனை தொடர்பு கொள்ளுங்கள்.


நானும் எனது வாழ்த்துக்களை இந்த திட்டத்தில் ஈடுபட்ட எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் பங்களிப்புகளை செய்ய வேண்டுமாயின் ITTPO இனை தொடர்பு கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் என் நிஜப் பெயரில் (Gana) தான் பங்களிப்பு செய்துள்ளேன்.











Read more...

October 13, 2007

கீறல்கள்


அவசரமான உலகிலே, உறவுகளின் நிலைமைகள் சற்று மன வருத்தம் தருவதாகவே இருக்கின்றது. அழையா விருந்தாளியாக ஒரு உறவை நாடி சென்ற அனுபவத்தை கிறுக்கிய போது,


மேலைத்தேச உறவுகள்



உரிமையுடன் அழைப்பு மணி அடித்தேன்
அழையா விருந்தாளியாய்,
பரிவுடன் திறந்தது கதவு
அட நீங்களா! என்றது ஓர் குரல்
ஆரவாரத்துடன் அல்ல, அலுத்து கொண்டு
முகவரி தவறினேனா என்று எண்ணி
ஒரு கணம் திகைத்து நின்று
சுதாகரித்து கொண்டு
எப்படி என்று நானும் சுகம் வினவ,
நிசப்தமே பதிலானது.

வாசல் கதவு திறந்தே இருந்தன,
சுள் என்று ஒரு உணர்வு என்னை சுடவும்
ஓரிரு அடிகள் உள்ளே எடுத்து வைக்க‌
அடுக்களையில் இருந்து ஓர் குரல்
அதிலை இருங்கோ என்று

அவசரமாய் அவள் எங்கே என்றேன் ஆதங்கத்துடன்,
இப்பத்தான் தூங்கினாள், அவளுக்கு சத்தம் பிடிக்காது
என்றாள் அவள் அன்னை.

மாடியிலேயோ என்றேன் நான்,
மறுமுறை அடித்து விட்டு வாருங்கள்
என்றது பதில்.

சிறைகளிற்குள் சிக்கிவிட்ட உணர்வுகள்,
மறுமுறை வரலாமா
என்ன தவறு நான் செய்தேன் இவர்களுக்கு,
ஆயிரம் கேள்விகள் எனக்குள்,

ஆதங்கத்தை அடக்கிக் கொண்டு,
ஆசுபத்திரிக்கு வரமுடியலை அலுவலக வேலையாலை
அது தான் இப்ப நான் இன்று.... என்றேன் அசடு வழிய‌
அதற்கும் ஏதும் பதிலில்லை.

அவசரமாய் இருக்கிறியள் போல‌
அப்புறமாய் வாறேன் என்று
சொல்லி கொண்டே வெளியேறினேன்
அப்போது தான் உறைத்தது
நான் மச்சானும் இல்லை மாமனும் இல்லை
மூன்றாவது மனிதன் மட்டும்.



கிறுக்கி முடித்துவிட்டு, மனதை திசை திருப்ப வானொலியின் ஒலியை கூட்டிய போது, வைரமுத்துவின் வரிகளில் வந்த பாடலின் இந்த வரிகள்

"உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால்
உலகம் ரொம்பச் சின்னதடா
ஊனப்பட்ட நிலவும் ஒருநாள்
பௌர்ணமி ஆகுமடா"

என்னை உற்சாகமூட்டியது.




Read more...

October 6, 2007

கடந்த பாதையில் சில துளிகள்....




வாழ்வியலில் மாற்றங்கள் தான் நிரந்தரமானவை, மற்றவை யாவும் மாறிக் கொண்டிருப்பவை என்பார்கள். கீதையில் கூட "இன்று உன்னுடையது அது நாளை இன்னொருவருடையது" என்று தத்துவங்களை அள்ளி வீசி சென்றதெல்லாம், எமக்கு ஏமாற்றங்களை ஏற்று கொள்ளுகின்ற மன நிலையை வளர்ப்பதற்கே.

ஏமாற்றங்கள் யாரால் யாருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒரு வகையில் நமது எதிர் பார்ப்புகளின் மறுப்பே ஏமாற்றம் எனலாம். என் வாழ்வில் ஒரு சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆரம்பத்தில் ஏமாற்றம் என்று தோன்றியவை இன்று சரியாகவே தோன்றுகின்றது.

1. தங்க மாம்பழம்

என்னடா புராணக்கதை ஏதாவது சொல்லப் போறேன் என்று பார்க்கிறீங்களா? இல்லைங்க, தொடர்ந்து வாசியுங்கள். கல்லூரி வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மனதை உற்சாகமூட்டும் ஒரு சுவாரசியமான வாழ்க்கை. நானும் இந்திய மண்ணில் காலடி எடுத்த வைத்த ஆரம்ப காலம் அது. எனது அண்ணாவுடன் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கொண்டு, நானும் எனது பொறியியல் பட்ட படிப்புக்காக கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தேன். எனக்கு மூத்த ஈழ மாணவர்கள் 13 பேர் அண்ணா பல்கலைக்கழக அனுமதி பெற்று பின் அதை விட்டு பேராதனை பல்கலைக் கழகத்திற்கு ( இலங்கை) திரும்பி சென்று விட்டார்கள். இதன் விளைவாக, எனது காலத்தில் பொறியியல் அனுமதி கேட்ட அனேகமான ஈழ மாணவர்களுக்கு தண்ணி இல்லாத காட்டில் தான் அனுமதி கிடைத்தது.

அது போல் எனக்கும், காமாராசர் மாவட்டத்தில் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. இந்த கல்லூரி ஒரே ஒரு தொடர்மாடியை மட்டும் கொண்டு ஆங்காங்கே சிறிய கொட்டகைகளுடன், ஒரு மலையடிவாரத்தில் சன நடமாட்டம் இல்லாத, வாகனப் போக்கு வரத்து குறைந்த வீதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தது. அட நம்ம பிழைப்பு அம்புட்டுத்தான் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தேன். பேசாமல் படிப்பதை விட்டிட்டு, நம்ம ஆளுங்க போற வெளிநாடு எங்காயவது போய் ஏதாவது செய்து பிழைத்திருக்கலாம் என்று தோணிச்சு. எனது சகோதரத்தை பார்த்து, "இங்கை நான் படித்துதான் ஆகணுமா என்று கேட்க", அவர் "அவனவன் ஒரு இஞ்ஞினியரிங் சீற் எடுக்க எவ்வளவு கஸ்டப்படிகின்றான் உனக்கு தெரியாது " என்று வைய, சரி நான் எங்கு தங்கப்போகின்றேன் வினவினேன்.

எனது மூத்த ஈழ மாணவர்கள் சிறீவில்லிபுத்தூரில் தங்கியிருந்த வீடு என்று சொல்லப்படும் ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே ஆறு பேர் தங்கியிருந்தார்கள். சுமார் 12x16 அடிகள் மட்டுமே இருக்க கூடிய அறையில் என்னையும் ஏழாவதாக சேர்த்துக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களில், இன்னொருவர் என்னுடன் படிப்பதற்கு எட்டாவாதாக சேர்ந்து கொண்டார். அங்கு 6 பேர் பொறியியல் கல்லூரியிலும், இருவர் பொலி டெக்னிக்கிலும் கற்பதாக தங்கியிருந்தோம்.

ஊரில் கிணற்று வாளியில் அள்ளி குழித்த எங்களுக்கு, அதி காலையில் வீட்டில் முற்றத்தில் உள்ள குழியில் விழுகின்ற தண்ணியை முகந்து வந்து, படிகளில் ஏறி மாடியிலுள்ள எமது அறையுடன் இணைந்துள்ள குளியல் அறையில் சேகரிக்க வேண்டும். பணத்தை விட இங்கு தண்ணியை தான் சிக்கனப்படுத்த வேண்டிய அவசியம். குளியலறை நாலு பக்கமும் மூடியதாக இருந்தாலும், மேலே மூடப்படாமலே இருந்தது.


சிறீவில்லிபுத்தூரில் குடும்பமாக வாழாதோருக்கு வீடு எடுப்பது மிகவும் கடினம். எங்களில் அனேகமானோருக்கு டாலரிலும் பவுண்டிலும் தான் பணங்கள் வரும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், எங்களுக்கு வீடு பார்ப்பதற்கு உதவாதா என்று எண்ணி, ஒரு புறோக்கர் மூலம் வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்தோம். கிடைக்கும் வரை இந்த அறையில் தங்குவதாக தீர்மானித்து கொண்டோம்.


எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும், அவ்வப்போது எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை விவாதித்திருக்கின்றோம். ஈழத்தின் வரை படத்தை உருவகிபடுத்தி பார்த்தால், யாழ்ப்பாணத்தை தலை என்பார்கள், வடமராட்சியை மூளைப்பகுதி என்பார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்தவன் நான். ஒரு சிலர் இருப்பது ஊருக்கு பெருமை, இன்னும் சிலருக்கு ஒரு ஊரில் பிறந்தது பெருமை. நான் 2ம் வகை.

வடமராட்சியை சேர்ந்தவன் நான் ஒருத்தன் தான், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து ( போட்டியோ அல்லது பொறாமையோ தெரியாது) என்னை ஒரு வழிப்பண்ணி விடுவார்கள். உதாரணத்திற்கு, நானும் வடமராட்சியை சேர்ந்த அரசியலை , போராட்டங்களை, கல்வி மான்களை உதாரணம் காட்டி அவர்களின் வாயை அவ்வப்போது மூடியதுண்டு.

சுவாரசியமாக‌ திருமணம், காதல் சம்பந்தமாக விவாதித்திருந்தோம். அந்த சம்பாசனைகளில் வந்த சில துளிகள்:

" பலரை பார், மூவரை தெரிவு செய், இருவரை காதலி, ஒருவரை திருமணம் செய்"

"20 இலிருந்து 25 இற்குள், எவளை திருமணம் செய்வதென்று அறி, 25 இலிருந்து 30 இற்குள், எப்போது திருமணம் செய்வதென்று அறிந்து முடித்துக்கொள், 30 இற்கு மேல் உன்னை யார் திருமணம் செய்வார் என்று ஏங்க வேண்டியிருக்கும்."

"விதவைக்கு வாழ்வு கொடுக்கவேண்டும்"

" கடவுச்சீட்டில் பெண் என்று இருந்தால் போதும்"

" படித்த ஃபோவாட்டான (FORWARD) பொண்ணு வேணும்"


என்ற பல கோணங்கள் ஆராயப்பட்டன.

இப்படியான சுவாரஸ்யங்கள் ஒரு புறமிருக்க, உறவுகளின் நினைவுகளும் அப்போது வந்து கனக்க வைத்தன. விடுமுறைகளின் போது எங்கு செல்வது என்று யோசிக்க, இந்திய நட்புகள் மச்சி நீ எங்க ஊருக்கு வா என்று உரிமையோடு அழைத்தது எங்களை நெகிழ வைத்தவை.

வருடம் ஒன்று கழிந்து, ஒரு மாதிரி, ஒரு புறோக்கர் மூலம் 4 பேர் தங்கும் வசதியுள்ள, தண்ணி டாங் வசதியுள்ள 6 வீடுகள் கொண்ட ஒரு தொடரணியில் 2 மாடியுள்ள ஒரு வீடு 300 ரூபாய் வாடகைக்கும், 2000 ரூபாய் முதற்பணமாய் கொடுத்து எடுத்தோம். நானும் இன்னும் மூவரும் அந்த புதிய வீட்டிற்கு சென்றோம்.

"நைனா" என்று சொல்பவர் தான் எங்களிடம் வாடகை வசூலிப்பவர். அவர் தன் குடும்பக்கஷ்டத்தின் பேரில் எங்களிடம் கைமாறாக முன் கூட்டியே வாடகைப் பணத்தை வாங்கி கொடுப்பது வழக்கம். எங்கள் யுனிட்டில் ஒரு வீடு வாடகைக்கு வருவதை அறிந்து எனது சீனியர்சிற்கும் ஒரு வீடு எடுப்பதற்காக இவரை அணுகினோம். முதலாளியின் மகனை தெரிந்ததால் அவரிடம் கேட்ட போது, " நைனா" விடம் பேசினால் போதும் என்றார். நைனாவும் மூன்று மாம்பழத்துடன் வந்து தந்து விட்டு, வீட்டிற்கு எங்களிடம் முற்பணம் 2000 ரூபாய் வாங்கி சென்றார்.

இரண்டு வாரங்களாகின, நைனாவை காணவில்லை. முதலாளியை அணுகி, முற்பணம் கொடுத்தை சொன்ன போது, நைனாவிடம் அந்த பெரிய தொகையை கொடுத்தீர்கள் என்று சொல்லி விட்டு கையை விரித்து விட்டார்.

நைனாவை தேட தொடங்கி பல சுவாரசியமான தகவல்களை பெற்றோம். அவரது வீடு என்று அறிந்து அங்கு செல்ல, அவரது முதல் மனைவி " தானும் அவரை தேடுவதாக சொன்னாள்; அவர் இன்னொருத்தியுடன் வேறு இடத்தில் குடும்பம் நடத்துவதாக கூறினாள்". நாங்கள் அங்கும் சென்றோம், " அவளும் தன்னிடம் இல்லை என்றாள்". இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிதாக ஏமாற்றப்பட்டதாக ஒரு உணர்வு. அவர் தந்த மாம்பழத்தை தங்க மாம்பழம் என்று இன்றும் நினைவு கூறுகின்றோம்.

அன்று எங்கு படிக்க தயங்கினேனோ, அந்தப் படிப்பு என்னை வாழ்க்கையில் பல படிகள் முன்னேற்றியது மாத்திரம் அல்ல, என்னை சூழ இருந்தவர்களின் வாழ்வியலின் முன்னேற்றத்திற்கு உதவ வாய்ப்பு அளித்துள்ளது.

நான் படித்த கல்லூரி இப்போது ஒரு பல்கலைக்கழகமாக மாறியுள்ளதாக‌ அறிந்தேன். அதன் முகப்பை தான் எனது முகப்பிலும் போட்டிருகின்றேன்.
கலசலிங்கம் பல்கலைக்கழகம்

Read more...

September 28, 2007

வாகனமும் பாவனையும்!


அவசரமாக இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் நாம் நேரத்தை மிகவும் கருத்தில் வைத்து வாழ வேண்டியதாகியிருக்கின்றது. நேரம் தான் பணம் என்று சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் அடைந்துவிட்டது.

அன்றாட வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமாகிவிடுகின்றது. ஊரில் துவிச்சக்கர வண்டியில் ( சைக்கிள்) தான் பல இடங்களை சென்று வந்திருக்கின்றோம். ஒரு சிலர் மோட்டர் சைக்கிளை உபயோகித்து வந்தனர். பொது வாகன சேவைகளும் போக்குவரத்துக்கு பாவிக்கப்பட்டிருக்கின்றன. நானும் எனது பாடசாலை நாட்களை சைக்கிளில் தான் போய் வந்தேன்.

எனக்கு படிப்பித்த‌ tution master ‍ இரத்தினசபாபதி மாஸ்டர் ( சாக்கர் ‍பட்டப் பெயர்‍‍ ‍_ முன்னாள் ஹாட்லி கல்லூரி அதிபர்) எப்போதும் நடை பவனியில் வந்து தான் பாடம் சொல்லி தந்தவர். ஒருவருடைய வாகனத்திலும் ஏறி வந்ததில்லை. என்னை மிகவும் கவர்ந்த ஆசிரியர் இவர் தான்.

ஆனால் கனடாவில் நம்மவர்களுக்கு அரை மைல் தூரத்திலுள்ள கடைக்கு போவதென்றால் கூட கார் தேவைப்படுகின்றது. கனடா குளிர் நாடு தான், ஆனால் சூடான கால நிலையுள்ள காலப்பகுதி தான் அதிகம். கார் இங்குள்ளவர்களுக்கு சைக்கிள் மாதிரி தான் .

என்னுடன் வேலை பார்க்கும் கனடியர்(Brian Huntley) ஒருவரை பற்றி, அவருடைய வாழ்க்கை முறை, அவருடைய தேவைகள் எதிர் பார்ப்புகள் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு வித்தியாசமான பார்வைக்காக தருகின்றேன்.

இவர் கனடிய கடற்படையில் விமான ஓட்டியாக இருந்துவிட்டு, பல‌ ஆண்டுகள் சேவையிலிருந்து விட்டு இப்போது தகவல் தொழில் நுட்பத்தில் வேலை செய்கின்றார். இவர் சேவையிலிருக்கும் போது ஓட்டாத வாகனம் என்று ஒன்றும் இல்லை. ஆனால் இவரிடம் தற்போது உள்ள ஒரு வாகனம் சைக்கிள் தான். இவர் வேலைக்கு எப்போதும் சைக்கிளில் தான் வருவார். பூச்சியத்திற்கு கீழ் 40 பாகையாக இருந்தாலும் சைக்கிளில் தான் வருவார். பொழுது போக்காக கூட சைக்கிள் பயணம் தான்.

அவரிடம் பல தடவை மனம் விட்டு பேசியுள்ளேன். அவருக்கு வரலாறு, மற்றும் பல்வேறு தொழில் நுட்பம் பற்றிய அறிவு இருக்கின்றது. ஆனாலும் நடை முறை வாழ்க்கையில் தனது தேவைகளை மிகவும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பவர். வேலை சம்பந்தமாக பல தொழில் நுட்பங்களை கையாண்டாலும் ஒரு கைத்தொலை பேசி கூட சொந்தமாக பாவிப்பதில்லை ( வேலைக்காக Black Berry). இதற்காக காசு மிச்சம் பிடிக்கிறார் அல்லது வசதிகளை பெற வருவாயில்லை என்று தப்பாக எண்ணி விடவேண்டாம்.

இவர் தன் விடுமுறையை பெரும்பாலும் சைக்கிளில் புதிய இடங்களை வலம் வருவது தான் இவரது பொழுது போக்கு. இவர் அண்மையில் ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள ஐரோப்பிய நகரங்களை சைக்கிளில் வலம் வந்தார். எனக்கு இப்படி நகரங்கள் ஒன்ராரியோவில இருப்பது இவர் மூலம் தான் தெரிய வந்தது








City Country
Paris France
London, Belfast, Tottenham UK
Brussels Belgium
Formosa Portugal
Hanover Germany
Zurich Switzerland




சிலோன் என்று ஒரு சிறிய கிராமமும் இருக்கின்றதாம். சிலோன் என்ற பெயர் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வைத்த பெயர்.

0
படம் , வரை படம் ‍- Brian Huntley

இவர் தன்னுடைய பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக தனது தளத்தில் தெரிவித்துள்ளார்.
இவருடைய பயணத்தை தெரிந்து கொள்ள கீழே அழுத்தவும. Brian Huntley யின் சைக்கிள் பயணம்


ஓவ்வொரு மனிதருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மனிதன் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றான். இப்படியும் இந்த குளிர் நாட்டில் வாழலாம். நாம் எப்படி எங்களை தயார்படுத்தி கொள்கின்றோம் என்பதை பொறுத்து தான் எந்த தடையையும் வெல்வது தங்கியிருக்கின்றது.

Read more...

September 23, 2007

எது உண்மையான நட்பு?

வளர்ந்து விட்ட விஞ்ஞான உலகில், உலகம் கைகளுக்குள் வந்துவிட்டது போல் ஒரு உணர்வு. வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல் வேறு பட்ட மனித‌ர்களுடன் பழக கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இதில் யார் நண்பர்கள் ?
‍ நாம் தெரிவு செய்பவர்களா அல்லது நம்மை தெரிவு செய்பவர்களா நண்பர்கள்? என் வாழ்க்கையில் இந்த கேள்வி பல தடவை எழுந்திருக்கின்றது. விடை காண பல தடவை முயற்சித்துள்ளேன் ஆனால் இன்றும் பதில் காண முடியவில்லை.

நண்பர் என்றால் என் வயதை ஒத்தவராக இருக்க வேண்டுமா , எனது பாலை ஒத்தவராக இருக்க வேண்டுமா, எனது துறையை ஒத்தவராக இருக்க வேண்டுமா அல்லது எனது விருப்புகளுக்கு ஒத்தவராக இருக்க வேண்டுமா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், எல்லா தரப்புகளிலும் நட்புகள் இருப்பது யதார்த்தமாகி விடுகின்றது.

" தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்"

இந்த வள்ளுவனின் குறளை நினைவுபடுத்தி நட்புகளால் ஏமாற்றப்படும் போது எல்லாம், இவர்களிடம் இருந்தும் ஒரு சிறிய உதவியாவது பெற்றிருக்கின்றோம் என்று எண்ணி முரண்படுவதை விடுத்து ஒதுங்கி வாழ்ந்திருக்கின்றேன்.

என் வாழ்வின் வெற்றிக்கு பல நட்புகள் தான் உதவின என்பது உண்மை. அதே நேரம் நட்பு, என்ற போர்வையில் என்னை தோற்கடிக்க முயற்சித்தவர்களும் உண்டு என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

" அவர் அப்படித்தான்" என்று ஒரு நட்பை பிடிகொடுத்து விடாமல் இன்னொரு நட்பு கூறுவதை கேட்டிருப்பீர்கள். "அவர் அப்படித்தான்" என்று வரையறுக்கப்பட்ட வாழ்வியலை கொண்டவர்கள் யாரும் இல்லை. பண்பு, பாசம், பொறுமை என்ற நல்ல குணங்களை தங்களுக்கு தேவையானவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொண்டு, மற்றவர்களிடம் தாங்கள் கோபமானவர்கள், எடுத்தெறிந்து பேசுவது தஙகள் சுபாவம் என்று ஒரு வேடம் போடுபவர்களை தான் " அவர்கள் அப்படித்தான்" என்கிறார்கள்.

"உன் உறவுக்காக நீ முயற்சிக்காமல் விட்டால், உனக்கு அந்த உறவு வேலை செய்யாது" என்ற பழ மொழியில் எவ்வளவு அர்த்தம். போட்டி பொறாமையாகின்ற போது தான் அனேகமான உறவுகள் தோற்றுவிடுகின்றன. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உதவி செய்த நட்புகளையும் பார்த்திருகின்றேன். தம் தேவைகளுக்கு மட்டும் தான் நட்புகள் என்று வேடம் போடும் கூட்டத்தையும் பார்த்திருக்கின்றேன்.

ஒரு சிலர் மற்றவர்களின் பலவீனங்களை அடையாளம் கண்டு, அதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள். ஒருவருக்கு மது குடிக்க பிடிக்கும் என்றால் அவருக்கு தான் இலவசமாக மதுவை வாங்கி கொடுத்து தனக்கு பல மடங்கு பயனை பெற்று கொள்வார்கள். இவர்கள் மற்ற நண்பர்களுக்கு ஒரு காப்பி கூட வாங்கித்தராத வள்ளல்கள்.

ஒட்டுண்ணி தாவரங்கள் எச்சங்களின் மிச்சங்களால் காவப்பட்டு, வலிய மரங்களை உறிஞ்சி வாழுபவை. மற்றவர்களின் முதலையும் உழைப்பையும் உறிஞ்சி, காலத்துக்கு காலம் ஒவ்வொருவரை ஏமாற்றி நட்பு என்ற போர்வையில் குளிர் காய்வோர் சிலர்.

நட்பு எனபது இரு மனங்களிடையே ஏற்படும் ஒரு பிணைப்பு. இது ஒரு மூன்றாவது மன‌த்தின் பிரதிபலிப்பாக இருக்க கூடாது. எதிரிக்கு எதிரி நண்பன் என்றோ அல்லது நண்பனின் எதிரி எனக்கும் எதிரி என்று ஒரு நட்பை எதிர்த்து கொள்வதோ உண்மையான நட்பாக இருக்கமுடியாது.

ஒரு நகைச்சுவையான அடிக்கடி பேசப்படும் ஒரு வாகன மோதல் சம்பந்தமான பதிவில் ஒருவர் இப்படி குறிப்பிட்டிருந்தார். " எனக்கு முன் வேகமாக சென்ற புதிய‌ பென்ஸ் கார் திடீரென நிறுத்த, நான் எனது வாகனத்தை நிறுத்த முடியாமல் பென்ஸ் காரை இடிப்பதை தவிர்க்க முயர்சித்து வாகனத்தை திருப்பிய போது வழிப் போக்கன் மேல் ஏற்றி விட்டேன் " என்று தன்னுடைய விளக்கத்தை குறிப்பிட்டிருந்தார். இது போல் ஒரு நட்பை திருப்திபடுத்துவதாக எண்ணி இன்னொரு நட்பின் உணர்வை கொன்று விடுபவர்களும் உண்டு.

நட்பு எனபது நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவர் ஒருவரை பாதிக்காமல், அவர் தம் நிலை அறிந்து, மற்றவரின் கஷ்டத்தில் கை கொடுத்து உண்மையான புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளும் உன்னத உறவு.

நட்பு என்பது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து, தேவையான போது விட்டு கொடுத்து ,எப்போதும் நண்பன் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டிய ஒரு உன்னத உறவு. ஒருவன் நொந்திருக்கும் போது தான் உண்மையான உறவுகளை பற்றி தெரிந்து கொள்கின்றான். சந்தேகம் தான் எந்த உறவையும் பிரித்திவிடும் விசம். முடிந்தால் மனம் திறந்து பேசுங்கள். உண்மையான நட்பிடம் சரி பிழையை விவாதியுங்கள். என் பிழை, உன் பிழை என்று வாதித்து, பிரிந்து செல்லாமல் முடிந்தால் சந்த்தித்து மனம் விட்டு பேசுங்கள். தேவைகளுக்காக மாத்திரம் நட்பு என்றில்லாமல், நட்பும் தேவை என்று எண்ணினால் தான் நட்பும் வாழும். எந்த உறவும் நட்பு கலந்த உறவாகும் போது தான் வெற்றி பெறுகின்றது.

இந்த கிறுக்கன் எந்த நட்பிலும் கீறல்கள் விழுந்து விடக்கூடாது என்று எண்ணிகொண்டு எழுதிய கிறுக்கல் தான் இது.

உங்கள் பார்வையையும் தெரிவியுங்கள்.

Read more...

September 16, 2007

எதை விரும்புகின்றாய் என்று அறிந்துகொள்!

நாம் பல மனிதர்களுடன் பல வேளைகளில் பல்வேறு பட்ட கருத்துப் பரிமாற்றங்களை, எண்ணங்களையும் பரிமாறியிருக்கலாம். வாழ்க்கை எனபதிற்கு ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அதை அடைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்கள் பலர் இருந்தாலும் ஒரு சிலரே தமது பயணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். என்னை மிகவும் கவர்ந்த ஒரு வெற்றி பெற்ற மனிதரின் உரையிலிருந்து சில கருத்துக்களை நம் வாழ்வியலுடன் அசை போட்டு பார்க்க முயல்கின்றேன்.


இந்த பெரும் புள்ளியின் தாயார் ( biological mother) தன் மகன் ஒரு கல்லூரி பட்டதாரியாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் தன் வருமான‌த்தின் இயலாமையால் தன் பிள்ளையை ஒரு பட்டதாரி குடும்பத்திற்கு தத்து கொடுக்க முயன்று கடைசியில் பாடசாலையே முடிக்காத தந்தையும் கல்லூரி முடிக்காத தாயும் தத்தெடுக்க விட்டார்.

தனது 17 வயதில் கல்லூரி படிப்புக்காக நுழைந்தும், சராசரி உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெற்றோரால் தாம் வாழ் நாளில் சேகரித்த முழுப்பணத்தை செலவிட்டும் கல்லூரி படிப்புக்கு மாத்திரமே செலிவிட முடிந்தது. தங்குவதற்காக நண்பர்களின் அறையில் தரையில் படுத்து காலத்தை ஓட்டினார். கைச்செலவிற்காக கோக் (coke bottles) போத்தல்களை சேர்த்து கொடுத்து ஒரு போத்தலுக்கு 5 சதம் வீதம் பெற்றுக் கொண்டார். வாரத்தில் ஒரு முறை 7 மைல்கள் நடந்து சென்று "கரே கிருஷ்ணா" ஆலயத்தில் வயிறார சாப்பிட்டாராம். இதே வேளை தான் படித்து கொண்டிருந்த பட்ட படிப்பில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். 6 மாத்தில் தான் படித்த பட்ட படிப்பை விட்டுவிட்டு தனது பகுதி நேர படிப்பாக calligraph பாடத்தை கற்று கொண்டார். இந்த படிப்பு எழுத்து உருவம் சம்பந்தமானது. இந்த படிப்பு இல்லாவிட்டால் பல எழுத்துருக்கள் ( type faces) கொண்ட கணணியை உருவாக்கியிருக்க முடியாது என்கிறார்.

தனது 20 வயதில் பெற்றோரின் கராஜ்ஜில் ( garage) இருவர் மட்டுமே கொண்ட கணணி நிறுவனத்தை ஆரம்பித்து 10 வருடங்களில் உலகு போற்றும் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றினார். வாழ்க்கையில் நாம் கடந்து வந்த வாழ்க்கையில் பின்னோக்கி பார்த்தால் மாத்திரமே அவற்றில் உள்ள முக்கிய புள்ளிகளை இணைத்து பார்க்கலாமாம் (connect your dots). ஆனால் எதிர் காலத்தை அல்ல. நாம் நம்புவது தைரியம், எதிர்காலம், வாழ்க்கை, கர்மா போன்றவை என்று சொல்லிக் கொண்டாலும் தனது அணுகுமுறையை எதுவுமே தடை செய்யவில்லையாம். தனது வாழ்க்கையில் இந்த நிலைக்கு வருவதற்கு தனது அணுகுமுறையே காரணமாம்.

நாம் நேசிப்பது எதுவாக இருந்தாலும் அது மறுக்கப்படும் போது அதன் வலி தாங்கமுடியாததாக இருக்கும். இந்த வெற்றி பெற்ற மனிதருக்கும் வாழ்க்கையில் சவால் காத்திருந்தது. தான் தன் உதவிக்காக ஒருவரை‌ ( chief Operating Officer) முதன்மை நடத்து இயக்குனராக தெரிவு செய்து, இயக்குனர் சபை அவருக்கு சார்பாகி தான் ஆரம்பித்த‌ நிறுவனத்திலிருந்து 30 வயதிலே வெளியேற்றப்பட்டார் ( Fired from his company). உலகுக்கே தெரிந்த ஒரு தலைவர் தனது வேலையில் இருந்து அகற்றப்பட்டது பத்திரிகை தலைப்புக்களாகின. செய்வதறியாது வெட்கி தலை குனிந்தார். த‌னது வாழ்க்கையின் முழு மூச்சு நின்று விட்டதாக ஒரு உணர்வு. தோல்வியின் வலி அவரை சிலிக்கன் பள்ளத்தாக்கை விட்டே ஓடலாம் என்று எண்ண வைத்ததாம்.

சில மாதங்களின் பின் தான் மறுக்கப்பட்டது சில மனிதர்களாலேயே தவிர தான் நேசித்த துறையை அல்ல என்று உணர்ந்து கொண்டார். அடுத்து வந்த 5 வருடங்களில் NeXt என்ற கணணி நிறுவனத்தையும், PIXAR என்ற‌ Animation நிறுவனத்தையும் ஆரம்பித்தார். உலகத்திலேயே முத‌ல் கணனி மயப்படுத்தப்பட்ட Animation Movie - TOY STORY தயாரிக்கப்பட்டது PIXAR இல் தான்.

சில வருடங்களின் பின் எந்த நிறுவனத்திலிருந்து இவர் நீக்கப்பட்டாரோ அதே அப்பிள் ( Apple) நிறுவனம் இவருடைய புதிய நிறுவனமான NEXT ஐ கொள்வனவு செய்து மீண்டும் அப்பிள் நிறுவனத்தின் சிம்மாசனத்தில் இருத்தியது. இவர் வேறு யாரும் இல்லை ஷ்ரீவ் ஜொப் ( Steve Jobs) தான். கசப்பான மருந்தும் உடல் நலத்தை திருத்த உதவுவது போல், Apple இல் தன் கசப்பான அனுபவங்களும் அதன் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது என்கிறார் Steve.

தன் வாழ்க்கையின் வெற்றிக்கு முதல் காரணி, தான் விரும்பியதை எப்போதும் செய்யக்கூடியதாக இருந்தது தானாம்.

Steve இன் பார்வையில் ‍‍‍
"
இவை எல்லாம் நடந்திருக்காது நான் அப்பிள் இருந்து அகற்றப்படாமல் விட்டால். எதற்கும் பொறுமை அவசியம் என்று நம்புகின்றேன். சில சமயங்களில் வாழ்க்கையில் நமக்கு யாரோ கல்லால் தலையில் அடித்தது போன்ற கடினமான உணர்வுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் நம்பிக்கையை இழக்க கூடாது. நீ எதை விரும்புகின்றாய் என்று முதல் அறிந்து கொள். அது உனது காதலாக இருந்தாலும் சரி வேலையாக இருந்தாலும் சரி பொருந்தும். உனது வேலை தான் உன் வாழ்க்கையின் பெரிய பாகமாக இருக்கப் போகின்றது. நீ
எது உன்னை திருப்திபடுத்தும் என்று நம்புகிறாயோ அது வரை முயற்சி செய். எந்த ஒரு நல்ல உறவாக இருந்தாலும், காலம் போக போக தான் அது மிகவும் நல்லதாக அமைகிறது. இல்லாவிடில் நல்ல ஒரு உறவுக்காக காத்திரு. அவசரப்பட்டு முடிவெடுக்காதே.

எனது 17 வயதில் நான் வாசித்த வரிகள்‍ _ நீ வாழுகின்ற ஒவ்வொரு நாளும் உனது கடைசி நாள் என்று வாழ்ந்தால் ஒரு நாள் நீ வாழ வேண்டியதை வாழ்ந்துவிடுவாய்_ .
நாம் எல்லோரும் ஒரு நாள் இறந்து விடுவோம். நம் வாழ்க்கையில் மற்றவர்களின் எதிபார்ப்புகள், புகழ், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலை போன்றவை நம்மை ஆட்டி படைக்கின்றன. மரணத்தின் வாசலில் இவை எல்லாம் அடையாளமற்றவையாகிவிடுகின்றன. எந்த மனிதனும் மரணத்தை விரும்புவன் அல்ல. சொர்க்கத்திற்கு போக விரும்புவர்களும் மரணத்தை விரும்ப மட்டார்கள். ஆனால் இந்த மரணத்திற்கு யாரும் விதி வில்க்கல்ல. வாழ்வியலில் ஒரு பெரிய கண்டு பிடிப்பு மரணம். இது வாழ்வியலை மாற்றும் காரணி. இது பழையவற்றை அகற்றி புதுமைக்கு வழிவிடும் முறை. இன்று நீ புதுமை இன்னும் சில காலத்தில் நீயும் பழமையாகி அகற்றப்படுவாய். இது வாழ்க்கையின் யதார்த்தம்.

உனது நேரம் வரையறுக்கப்பட்டது. உன் நேரத்தை மற்றவரின் வாழ்க்கையை வாழ்வதில் வீணடிக்காதே. மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக வாழுகின்ற வாழ்க்கையில் சிக்கிவிடாதே. மற்ற‌வர்களின் புகைச்சல்கள் உன் உள் மனதின் குரலை நசுக்காமல் பார்த்து கொள்ளு. நீ ஏற்கனவே நிர்மாணமானவன், எனவே தயங்குவதற்கு என்ன இருக்கிறது உன் உள்ளத்தின் உணர்வுகளை பின் தொடர.

தாகமாய் இரு, முட்டாளாய் இரு. "


இந்த உரையை Steve Jobs, Stanford University பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தின‌ராக வந்த போது த‌ந்திருந்தார். நான் எனக்கு பிடித்த பகுதியை எனது தமிழாக்கத்தில் தந்திருக்கின்றேன்.

Read more...

September 3, 2007

PIT புகைப்படப் போட்டிக்காக






Read more...

நடைபாதை ஓவியம்.

மேலைத் தேசங்களில் பெயர் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் பல மில்லியன் டாலர்களிற்கு விற்கப்படும்போது, வீதியோரமாக வயிற்று பிழைப்புக்கான ஒவியங்களும் தீட்டப்படுகின்றன. ரொரன்ரொ வீதிகளில், நீளமான வீதியான (young street) யங் வீதியருகே இந்த ஓவியம் என் கண்களை கவர்ந்தது.



கரி, சோக்கு போன்றவை உபயோகித்து மிகவும் துல்லியமாக இந்த ஓவியம் உயிர்ப்பு பெற்றது.
ஓர் சிறிய படத்தை வைத்துக்கொண்டு ஒரு கரடு முரடான தரையில் இந்த ஓவியம் எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் உருவாகியிருக்கின்றது.



நான் இரசித்ததை உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.

Read more...

August 25, 2007

குறுந்தீவுப் பயணம்.


















நாமே ஈழத்தீவில் இருந்து வந்திருக்கிறோம். இல்லை, நாம் சப்த தீவுகளில் ஒன்றிலிருந்து வந்து இருக்கின்றோம் என்று கூற, இன்னும் சிலர் உலகத்திலேயே பெரிய தீவு அவுஸ்திரேலியா என்று சொல்ல இன்னும் சிலர் அது கண்டம் என்று மறுப்பு சொல்ல, நானும் எனது குறுந்தீவு பயணத்தை சொல்ல முயற்சிக்கிறேன்.
























இது ஒன்ராரியோ (Ontario) மாநிலத்தில் முஸ்கோகா (Muskoka) என்ற நகரத்திலுள்ள ஒரு சிறிய தீவு தான். ரொறன்ரோ (Toronoto) நகரத்திலிருந்து சுமார் 240 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இது ஒரு குன்று ( சிறிய மலை மாதிரி) சுற்றி வர கீலி லேக்(Healy Lake). இந்த தீவில் வாழ்வோர் காலத்தை வென்றோர் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் வீட்டு முற்றதிலும் கீலி லேக், வீட்டு பின் பக்கதிலும் கீலி லேக்.கோடையில் வீட்டு முன்பக்கமாக வள்ளத்தை பாவித்து வருவார்கள். வின்ரரில்( winter) ஸ்னோ மொபைலை (snow mobile) பாவித்து வீட்டு பின்பக்கமாக வருவார்கள்.






















தண்டவாளம் மாதிரியான ஒரு அமைப்பை செய்து அதில் இறங்கு துறையிலிருந்து பொருட்களை மேலே வீட்டுக்கு கொண்டு செல்வார்கள். வீட்டுக்கு வெளியே சிறிய வீடு ( Out house) மதிரியான அமைப்பு முறைகளும் உண்டு.





















வீட்டிற்கு பல படிகள் ஏறி தான் செல்ல வேண்டும். இப்படியான வாழ்க்கை முறைகளை கொண்டுள்ளவர்கள் எவ்வளவு தூரம் தங்களை முன்கூட்டியே தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்று எண்ணி பார்க்க வேண்டும். ரொறன்ரோ நகரத்திலிருப்போர் சிலர் குழந்தைக்கு பால்மா முடிந்து விட்டது என்று, தூக்கத்தில் இருக்கும் கணவனை நடுநிசியில் கலைக்கும் வாழ்க்கை முறையும் நம்மவர் மத்தியில் இருக்கின்றதை மறுக்கமுடியாது.


















இந்த வீடுகள் அனேகமாக மரத்தினால் மட்டும் அமைக்கப்பட்ட கட்டமைப்பு கொண்டவை. அடர்த்தியான மரங்கள் சூழ ஆற்றங்கரை ஓரத்தில் வீட்டு வாசலில் குடும்பத்துடன் இனிமையான தென்றல் எம்மை வருட இயற்கையை ரசித்து வாழும் வாழ்க்கை என்றும் பசுமையானது. சுமார் 146 குடிமனைகளே இந்த தீவில் இருக்கின்றது. ஓரளவிற்கு எல்லோரும் எல்லோரையும் தெரிந்த ஒரு கிராம அமைப்பு.












மீன் பிடித்தல் இங்கு உள்ள எல்லோரதும் பொழுதுபோக்கு. உண்மையாக சொன்னால் மீனை பிடித்து மீண்டும் நீரிலேயே மீனை ஓடவிடுவார்கள். எந்த ஒரு உயிரினமும் இயல்பாக்கம் அடையும் என்று சொல்வார்கள். இதற்கு மீன் என்ன விதி விலக்கா, அதற்கு ஏற்ப மனிதனும் வித்தியாசம் வித்தியாசமான முறைகளை கையாளுகின்றான்.
தூண்டிலில் மண்புழுக்களை போட்ட காலம் போய். மீன்களை பாதிக்காத செயற்கை புழு, மீன் குஞ்சுக்கள் போன்றவற்றை பாவிக்கிறார்கள்.















பொதுவாக தீவில் வாழும் மக்கள் உபசரிப்புக்களில் மிகவும் சிறந்து விளங்குவார்கள் என்று ஊரிலும் ஏன் கனடாவிலும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.இதே மாதிரி இந்த தீவிலும் மக்கள் மிகவும் உபசரிப்புடன் நடந்து கொள்வதை பார்க்க மனதிற்கு உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது.
















பல வேற்று இன மக்கள் வாழும் இந்த தீவில் மக்கள் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று என்னை அழைத்து சென்றவர் பெருமையாக சொன்னார். ஆனால் நம்மில் சிலர் ஒரே ஊரில் இருந்து வந்து ஒற்றுமையில் வேற்றுமை காண முயல்வது நம் மனங்களை சற்று கனக்க வைக்கின்றது















இங்குள்ள குழந்தைகளுக்கு நீர் விளையாட்டுக்களுக்கு குறைவே இல்லை. பெற்றோர் மிகவும் ஒத்துழைப்பாக இருக்கின்றார்கள்.


















சுமார் 10 மணி நேரம் எப்படி போனது என்பது தெரியாமல், மறக்க முடியாத ஒரு நாளை கழித்த மனக்களிப்புடன் நானும் எனது நகரத்திற்கு திரும்பினேன்.

Read more...

August 14, 2007

சமூகக் கண்ணோட்டம்

நான் சொன்னால் நம்பமாட்டியள், கனடாவிலை தமிழர்களின் விழாக்களுக்கு குறைச்சல் இல்லை பாருங்கோ. இதுக்குள்ள ஆளாளுக்கு போட்டி பாருங்கோ. ஒரு சிலர் சொல்லுவினம் நாங்கள் தேசியத்திற்காக செய்யிறம் என்றும் இன்னும் சிலர் உள்ளூர் கலைஞர்களை வளர்க்கிறதுக்கெண்டும் சொல்லுகினம். இன்னும் சிலர் மக்களை திருப்திபடுத்த வெளிநாட்டு கலைஞர்களை கொண்டு வந்து செய்யிறம் என்கினம்.

தேசியம், தேசியம் பற்றிய எண்ணங்கள் வளரோணும் அதிலை மாற்று கருத்தில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கிறதிற்கு ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
இதிலை பெரிய புதினம் என்னவென்றால் எல்லா நிகழ்ச்சிகளை பற்றியும் எல்லா ஊடகங்களிலும் காசு கொடுத்தாலும் போடமாட்டினம்.தாங்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிக்கு போட்டி என்று நினைத்தால் அது சகோதர அமைப்பாக இருந்தாலும் இருட்டடிப்பு தான்.

இந்த மாதிரியான நடவடிக்கைகள் ஒரு ஊடகத்தின் பொதுக்கோட்பாடுகளுக்கு முரணானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான நடவடிக்கையாகும். இவ்வூடகங்களில் உள்ளோர் தாம் கனடிய நீரோட்டத்திலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு நிகராக வள்ர்ந்து விட்டதாக மார் தட்டவும் மறப்பதில்லை.

இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு தாங்கள் மக்கள் ஊடகம் என்பதை மறந்து ஒரு சில தனிப்பட்டவர்களின் முடிவுகளுக்கு கேள்வி கேட்க யாருமில்லை என்ற ஒரு எண்ணமோ அல்லது தாம் வளர்ந்து விட்டோம் இனிமேல் ஒருவருடைய தயவும் தேவையில்லை என்ற எண்ணமோ?

நானறிய, சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக கனடிய மண்ணில் தேசியம் சம்பந்தமான பல விழாக்களை வெற்றியாக நடத்திய ஒருவர் தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு விளம்பரம் தர ஒரு தேசிய நீரோட்டதுடன் இருக்கும் பத்திரிகை ஆசிரியர் அனுமதி மறுத்துவிட்டார்.

இப்படியான போட்டிகளும் பொறாமைகளும் ஈழத்தமிழர்களாகிய எங்களுடைய விடிவுக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடுகின்றது.
நாம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம், எல்லாத்தமிழர்களையும் ஒருமுகப்படுத்தி கொண்டு செல்லவேண்டிய கடமை எல்லா தமிழ் ஊடகங்களுக்கும் உண்டு.

Read more...

July 14, 2007

கேட்டு பிடித்த வரிகள்

சிரிப்பு



இன்பத்தில் சிரிப்பவன் அதிஸ்டசாலி
துன்பத்தில் சிரிப்பவன் ஞானி
கண்டவுடன் சிரிப்பவன் காரியவாதி
தெரிந்து சிரிப்பவன் நடிகன்
தெரியாமல் சிரிப்பவன் ஏமாளி
நிலை மறந்து சிரிப்பவன் நிதானமற்றவன்
நிலை உணர்ந்து சிரிப்பவன் நிதானமவுள்ளவன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்
உட்கார்ந்து சிரிப்பவன் சோம்பேறி
உழைப்பால் சிரிப்பவன் உய்ர்ந்த மனிதன்

Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP