October 6, 2007

கடந்த பாதையில் சில துளிகள்....




வாழ்வியலில் மாற்றங்கள் தான் நிரந்தரமானவை, மற்றவை யாவும் மாறிக் கொண்டிருப்பவை என்பார்கள். கீதையில் கூட "இன்று உன்னுடையது அது நாளை இன்னொருவருடையது" என்று தத்துவங்களை அள்ளி வீசி சென்றதெல்லாம், எமக்கு ஏமாற்றங்களை ஏற்று கொள்ளுகின்ற மன நிலையை வளர்ப்பதற்கே.

ஏமாற்றங்கள் யாரால் யாருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒரு வகையில் நமது எதிர் பார்ப்புகளின் மறுப்பே ஏமாற்றம் எனலாம். என் வாழ்வில் ஒரு சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆரம்பத்தில் ஏமாற்றம் என்று தோன்றியவை இன்று சரியாகவே தோன்றுகின்றது.

1. தங்க மாம்பழம்

என்னடா புராணக்கதை ஏதாவது சொல்லப் போறேன் என்று பார்க்கிறீங்களா? இல்லைங்க, தொடர்ந்து வாசியுங்கள். கல்லூரி வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மனதை உற்சாகமூட்டும் ஒரு சுவாரசியமான வாழ்க்கை. நானும் இந்திய மண்ணில் காலடி எடுத்த வைத்த ஆரம்ப காலம் அது. எனது அண்ணாவுடன் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கொண்டு, நானும் எனது பொறியியல் பட்ட படிப்புக்காக கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தேன். எனக்கு மூத்த ஈழ மாணவர்கள் 13 பேர் அண்ணா பல்கலைக்கழக அனுமதி பெற்று பின் அதை விட்டு பேராதனை பல்கலைக் கழகத்திற்கு ( இலங்கை) திரும்பி சென்று விட்டார்கள். இதன் விளைவாக, எனது காலத்தில் பொறியியல் அனுமதி கேட்ட அனேகமான ஈழ மாணவர்களுக்கு தண்ணி இல்லாத காட்டில் தான் அனுமதி கிடைத்தது.

அது போல் எனக்கும், காமாராசர் மாவட்டத்தில் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. இந்த கல்லூரி ஒரே ஒரு தொடர்மாடியை மட்டும் கொண்டு ஆங்காங்கே சிறிய கொட்டகைகளுடன், ஒரு மலையடிவாரத்தில் சன நடமாட்டம் இல்லாத, வாகனப் போக்கு வரத்து குறைந்த வீதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தது. அட நம்ம பிழைப்பு அம்புட்டுத்தான் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தேன். பேசாமல் படிப்பதை விட்டிட்டு, நம்ம ஆளுங்க போற வெளிநாடு எங்காயவது போய் ஏதாவது செய்து பிழைத்திருக்கலாம் என்று தோணிச்சு. எனது சகோதரத்தை பார்த்து, "இங்கை நான் படித்துதான் ஆகணுமா என்று கேட்க", அவர் "அவனவன் ஒரு இஞ்ஞினியரிங் சீற் எடுக்க எவ்வளவு கஸ்டப்படிகின்றான் உனக்கு தெரியாது " என்று வைய, சரி நான் எங்கு தங்கப்போகின்றேன் வினவினேன்.

எனது மூத்த ஈழ மாணவர்கள் சிறீவில்லிபுத்தூரில் தங்கியிருந்த வீடு என்று சொல்லப்படும் ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே ஆறு பேர் தங்கியிருந்தார்கள். சுமார் 12x16 அடிகள் மட்டுமே இருக்க கூடிய அறையில் என்னையும் ஏழாவதாக சேர்த்துக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களில், இன்னொருவர் என்னுடன் படிப்பதற்கு எட்டாவாதாக சேர்ந்து கொண்டார். அங்கு 6 பேர் பொறியியல் கல்லூரியிலும், இருவர் பொலி டெக்னிக்கிலும் கற்பதாக தங்கியிருந்தோம்.

ஊரில் கிணற்று வாளியில் அள்ளி குழித்த எங்களுக்கு, அதி காலையில் வீட்டில் முற்றத்தில் உள்ள குழியில் விழுகின்ற தண்ணியை முகந்து வந்து, படிகளில் ஏறி மாடியிலுள்ள எமது அறையுடன் இணைந்துள்ள குளியல் அறையில் சேகரிக்க வேண்டும். பணத்தை விட இங்கு தண்ணியை தான் சிக்கனப்படுத்த வேண்டிய அவசியம். குளியலறை நாலு பக்கமும் மூடியதாக இருந்தாலும், மேலே மூடப்படாமலே இருந்தது.


சிறீவில்லிபுத்தூரில் குடும்பமாக வாழாதோருக்கு வீடு எடுப்பது மிகவும் கடினம். எங்களில் அனேகமானோருக்கு டாலரிலும் பவுண்டிலும் தான் பணங்கள் வரும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், எங்களுக்கு வீடு பார்ப்பதற்கு உதவாதா என்று எண்ணி, ஒரு புறோக்கர் மூலம் வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்தோம். கிடைக்கும் வரை இந்த அறையில் தங்குவதாக தீர்மானித்து கொண்டோம்.


எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும், அவ்வப்போது எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை விவாதித்திருக்கின்றோம். ஈழத்தின் வரை படத்தை உருவகிபடுத்தி பார்த்தால், யாழ்ப்பாணத்தை தலை என்பார்கள், வடமராட்சியை மூளைப்பகுதி என்பார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்தவன் நான். ஒரு சிலர் இருப்பது ஊருக்கு பெருமை, இன்னும் சிலருக்கு ஒரு ஊரில் பிறந்தது பெருமை. நான் 2ம் வகை.

வடமராட்சியை சேர்ந்தவன் நான் ஒருத்தன் தான், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து ( போட்டியோ அல்லது பொறாமையோ தெரியாது) என்னை ஒரு வழிப்பண்ணி விடுவார்கள். உதாரணத்திற்கு, நானும் வடமராட்சியை சேர்ந்த அரசியலை , போராட்டங்களை, கல்வி மான்களை உதாரணம் காட்டி அவர்களின் வாயை அவ்வப்போது மூடியதுண்டு.

சுவாரசியமாக‌ திருமணம், காதல் சம்பந்தமாக விவாதித்திருந்தோம். அந்த சம்பாசனைகளில் வந்த சில துளிகள்:

" பலரை பார், மூவரை தெரிவு செய், இருவரை காதலி, ஒருவரை திருமணம் செய்"

"20 இலிருந்து 25 இற்குள், எவளை திருமணம் செய்வதென்று அறி, 25 இலிருந்து 30 இற்குள், எப்போது திருமணம் செய்வதென்று அறிந்து முடித்துக்கொள், 30 இற்கு மேல் உன்னை யார் திருமணம் செய்வார் என்று ஏங்க வேண்டியிருக்கும்."

"விதவைக்கு வாழ்வு கொடுக்கவேண்டும்"

" கடவுச்சீட்டில் பெண் என்று இருந்தால் போதும்"

" படித்த ஃபோவாட்டான (FORWARD) பொண்ணு வேணும்"


என்ற பல கோணங்கள் ஆராயப்பட்டன.

இப்படியான சுவாரஸ்யங்கள் ஒரு புறமிருக்க, உறவுகளின் நினைவுகளும் அப்போது வந்து கனக்க வைத்தன. விடுமுறைகளின் போது எங்கு செல்வது என்று யோசிக்க, இந்திய நட்புகள் மச்சி நீ எங்க ஊருக்கு வா என்று உரிமையோடு அழைத்தது எங்களை நெகிழ வைத்தவை.

வருடம் ஒன்று கழிந்து, ஒரு மாதிரி, ஒரு புறோக்கர் மூலம் 4 பேர் தங்கும் வசதியுள்ள, தண்ணி டாங் வசதியுள்ள 6 வீடுகள் கொண்ட ஒரு தொடரணியில் 2 மாடியுள்ள ஒரு வீடு 300 ரூபாய் வாடகைக்கும், 2000 ரூபாய் முதற்பணமாய் கொடுத்து எடுத்தோம். நானும் இன்னும் மூவரும் அந்த புதிய வீட்டிற்கு சென்றோம்.

"நைனா" என்று சொல்பவர் தான் எங்களிடம் வாடகை வசூலிப்பவர். அவர் தன் குடும்பக்கஷ்டத்தின் பேரில் எங்களிடம் கைமாறாக முன் கூட்டியே வாடகைப் பணத்தை வாங்கி கொடுப்பது வழக்கம். எங்கள் யுனிட்டில் ஒரு வீடு வாடகைக்கு வருவதை அறிந்து எனது சீனியர்சிற்கும் ஒரு வீடு எடுப்பதற்காக இவரை அணுகினோம். முதலாளியின் மகனை தெரிந்ததால் அவரிடம் கேட்ட போது, " நைனா" விடம் பேசினால் போதும் என்றார். நைனாவும் மூன்று மாம்பழத்துடன் வந்து தந்து விட்டு, வீட்டிற்கு எங்களிடம் முற்பணம் 2000 ரூபாய் வாங்கி சென்றார்.

இரண்டு வாரங்களாகின, நைனாவை காணவில்லை. முதலாளியை அணுகி, முற்பணம் கொடுத்தை சொன்ன போது, நைனாவிடம் அந்த பெரிய தொகையை கொடுத்தீர்கள் என்று சொல்லி விட்டு கையை விரித்து விட்டார்.

நைனாவை தேட தொடங்கி பல சுவாரசியமான தகவல்களை பெற்றோம். அவரது வீடு என்று அறிந்து அங்கு செல்ல, அவரது முதல் மனைவி " தானும் அவரை தேடுவதாக சொன்னாள்; அவர் இன்னொருத்தியுடன் வேறு இடத்தில் குடும்பம் நடத்துவதாக கூறினாள்". நாங்கள் அங்கும் சென்றோம், " அவளும் தன்னிடம் இல்லை என்றாள்". இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிதாக ஏமாற்றப்பட்டதாக ஒரு உணர்வு. அவர் தந்த மாம்பழத்தை தங்க மாம்பழம் என்று இன்றும் நினைவு கூறுகின்றோம்.

அன்று எங்கு படிக்க தயங்கினேனோ, அந்தப் படிப்பு என்னை வாழ்க்கையில் பல படிகள் முன்னேற்றியது மாத்திரம் அல்ல, என்னை சூழ இருந்தவர்களின் வாழ்வியலின் முன்னேற்றத்திற்கு உதவ வாய்ப்பு அளித்துள்ளது.

நான் படித்த கல்லூரி இப்போது ஒரு பல்கலைக்கழகமாக மாறியுள்ளதாக‌ அறிந்தேன். அதன் முகப்பை தான் எனது முகப்பிலும் போட்டிருகின்றேன்.
கலசலிங்கம் பல்கலைக்கழகம்

18 comments:

Chandravathanaa 7:39 AM  

காரூரன்
புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவருமே எத்தனையோ ஏமாற்றங்களைத் தாங்க வேண்டித்தான் இருந்தது. இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களின் வலிகளையும் கஸ்டங்களையும் தமிழ்நதியின் பதிவுகளினூடு கொஞ்சமாவது உணர்ந்து கொண்டேன்.

உங்களின் இந்தப் பதிவிலிருந்தும் சிலதைப் புரிய முடிந்தது.

ஆனாலும் இந்தக் கஸ்டங்களினூடும் நீங்கள் ஒரேயடியாகச் சோர்ந்து போகாமல் முன்னேறினீர்களே! அதுதான் காலம் எமக்குத் தந்த தைரியம்.

வாழ்த்துக்கள் காரூரன். தொடர்ந்தும் முன்னோக்கியே செல்லுங்கள். எந்த சீரணிக்க முடியாத சம்பவங்களையும் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான உந்துதல்களாக எண்ணித் தொடருங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

காரூரன் 4:48 PM  

சந்திரவதனா,
எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் தான் வாழ்க்கையில் பலவற்றை அறிய வழி வகுக்கின்றன. எனக்கு ஏமாற்றம் என்று தோன்றியவை ஒரு வித அனுபவமின்மையும் தான். நான் சில அகதி முகாம்களிற்கு சென்று ஒரு சில ஈழத்து உறவுகளை பார்த்திருக்கின்றேன். அது மிகக் கொடுமை, குறுக்கே கட்டப்பட்ட ஒரு சீலை தான் இரு குடும்பங்களை பிரிக்கும் மறைப்பு. திறந்த வெளி தான் இவர்களின் காலைக்கடன் செய்யும் இடம். வருடங்கள் பலவற்றை இப்படியான ஒரு இடத்தில் இருப்பது என்பது மிகவும் கடினமானது. மற்றவர்களின் மன நிலையை அறிந்து பல மன ஓசைகளை தரும் உங்கள் கருத்துக்கள் என‌க்கு உற்சாகமூட்டுகின்றது.

உங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

வந்தியத்தேவன் 3:56 AM  

வணக்கம் காரூரன்
உங்களது அறி(வு)முகம் அருமையாக இருக்கின்றது. இன்னொரு வடமராட்சி பதிவரை வலையில் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. நானும் அதே இடத்தைச் சேர்ந்தவன் தான்.

ஊக்கத்தை கைவிடாமல் பதியுங்கள்.
வாழ்த்துகளுடன்

வந்தியத்தேவன்

காரூரன் 8:11 PM  

வாங்க வந்தியதேவன்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். அடிக்கடி வந்து போங்கோ.

Haran 10:36 AM  

காரூரன்,
உங்களுடைய எழுத்து எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பலரும் தமது அனுபவங்களை எழுதினாலும் கூட, நீங்கள் உங்களுடைய அனுபவத்தை அனுபவித்து எழுதுகின்றீர்கள். அதுவே உங்களுடைய திறமை.
எவ்வளவு துன்பங்களையும் தாங்கி இன்று வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையில் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாய் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
நமது வாழ்வில் ஏற்படும், ஏற்பட்ட துன்ப நிகழ்வுகளை ஒரு நல்ல கோணத்தில் பார்த்து (positive way of thinking) வாழ்வில் நீங்கள் முன்னேறிவருவதையிட்டுச் சந்தோசமும் பெருமையும் அடைகின்றேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.... (என்னிடம் அந்த விண்ணப்பத்தைக் கொஞ்ச நாட்களுக்கு போடாதீர்கள்...:P)

கெளரிகரன்

காரூரன் 7:03 PM  

கெளரிகரன்,
தஙகள் உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கு நன்றி. நான் ஒரு பகுதி நேர கணணி துறை ஆசிரியனாகவும் இருக்கின்றேன். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை பலருக்கு கல்வி கற்றுக் கொடுக்க வாய்ப்பு பெற்றவன். ஓரளவுக்கு நான் சொல்ல விரும்புவதை மற்றவர்கள் புரியும் படி சொல்லக் கற்றிருக்கின்றேன். ஒரு சிலரின் வாழ்க்கையிலாவது சந்தோசம் மலர, நானும் என்னால் முயன்ற உதவிகளை செய்துள்ளேன். நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.

தமிழன்-கறுப்பி... 8:26 PM  

நன்றி நன்றி நன்றி அண்ணன் நானும் வடமராட்சிதான் சந்தோசமாயிருக்கிறது நான் தற்பொழுதுதான் கணினியையே பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறேன் போகப்போக தேறி விடுவேன் சரிதானே…?

காரூரன் 10:53 PM  

வாங்க தமிழன்,
கிட்டத்தட்ட எனது 15 வயதில் சென்பற்றிக்ஸ் கல்லூரி பொருட்காட்சியில் ஒரு காட்சி பொருளாக தான் கண‌ணியை பார்த்தேன். அப்போது அதை பற்றி கேட்க, எனக்கு சொன்னால் புரியாது என்று சொல்லி விட்டார்கள். அதே கணணி துறை தான் எனக்கு இன்று சோறு போடுது. ஒன்றும் யோசியாமல் எழுதுங்கோ. அடிக்கடி வாங்கோ. நன்றிகள்.

காரூரன் 11:15 PM  

காரூரன்@

கலசலிங்கம் வளர்ச்சி அபிரிதமானது காரூரன்.

நம் ஊரில் இப்படி மாம்பழத்தோடு தங்களை ஏமாற்றிய விபரம் அறிகையில் வருத்தமாக இருக்கிறது. எனினும் உங்கள் அனுபவ ரீதியாக தங்க மாம்பழமெனும் நல்ல படைப்பைத் தந்திருக்கிறது என்று நினைத்தும் சமாதானமாக இயலவில்லை.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக முன்னாள் முதல்வர் திரு பி.எஸ். குமாரசாமிராஜா அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. அவர் தனது இல்லத்தைக்கூட பொதுமக்களுக்கு அளித்த மாண்பினை நினைத்து பெருமிதப்பட மட்டுமே முடிகிறது.

நன்றாக எழுதுகிறீர்கள் காரூரன்
தொடர்ந்து அனுபவங்களைப் பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
மதுமிதா

காரூரன் 11:22 PM  

மதுமிதா,

உங்களுக்கு பின்னூட்டம் இடுவதற்கு பெட்டி வரவில்லையா? , நான் உங்கள் பின்னூட்டத்தை உங்கள் தளத்திலிரிந்து எடுத்து போட்டுள்ளேன். வேறு ஏதாவது தலைப்பில் பின்னூட்டம் போடக்கூடியதாக இருக்கின்றதா? அறியத் தாருங்கள்.
அடிக்கடி வந்து போனால் தானே, இந்த பிரச்சனை எல்லாம் எங்களுக்கு தெரிய வரும் :))
நன்றிகள்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) 5:41 AM  

காரூரான்,நீன்கள் எந்த ஆண்டில் கலஸலிங்கத்தில் படித்தீர்கள்?
சிறீவில்லிபுத்தூர் என்றதும்(மதுமிதாவின் பதிவில் பார்த்து) உடனே உங்கள் பதிவைப் படித்தேன்
- அன்புடன் சிவப்பிரகாசம்

மதுமிதா 1:55 PM  

இப்போது எழுத இயலுகிறது
எடுத்து இட்டமைக்கு நன்றி காரூரன்

மதுமிதா 2:01 PM  

கணினி சரிசெய்யவேண்டியுள்ளது, தமிழ் எழுத்து டைப்பில் பிரச்சினை. எல்லாம் எழுதிவிட்டு க்ளிக் செய்யும் போது தானாக க்ளோஸ் ஆகிவிடுகிறது.
எப்படியோ சரிசெய்து எழுதுகிறேன்.

///Siva said...
காரூரான்,நீன்கள் எந்த ஆண்டில் கலஸலிங்கத்தில் படித்தீர்கள்?
சிறீவில்லிபுத்தூர் என்றதும்(மதுமிதாவின் பதிவில் பார்த்து) உடனே உங்கள் பதிவைப் படித்தேன்
- அன்புடன் சிவப்பிரகாசம்///


எனில் சிவப்பிரகாசம் அவர்கள் பதிவில் வந்து வாசித்துவிட்டு எதுவும் எழுதாமல் போயிருக்கிறாரா???

வந்து வாசித்து, தர்மஅடி தராமல் சென்றமைக்கு நன்றி சிவப்பிரகாசம்:-)

காரூரன் 8:24 AM  

Siva,

*\\எந்த ஆண்டில் கலஸலிங்கத்தில் படித்தீர்கள்? *\\

எனது பதிவுகள் உங்கள் தரத்திற்கு இல்லை போலும் :‍)), பதிவைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. நான் 85_89 ஆண்டுகளில் படித்தேன். நீங்களும் கலசலிங்கமோ அல்லது வில்லிபுத்தூரா?
வருகைக்கு நன்றிகள்.

காரூரன் 10:55 PM  

மதுமிதா,
வாங்க, வந்து பின்னூட்டம் போட்டதற்கு நன்றிகள். அடிக்கடி வாங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) 4:47 AM  

<---
வந்து வாசித்து, தர்மஅடி தராமல் சென்றமைக்கு நன்றி சிவப்பிரகாசம்:-)
-->
மதுமிதா,உஙகள் பிளாக்கை பற்றி டோண்டுவின் பிளாக்கில் படித்தேன்.
சே, சே, அதெல்லாம் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

நளாயினி 1:45 AM  

ஓ வடமராச்சியா. திருமணவாய்ப்பாட்டிலை இருந்தே தெரியுது.காட்லியோ.காட்லி எண்டா சொல்லவே தேவையில்லை. உhருக்கு உதவுவாங்கள் நல்லா. வீட்டுக்கு உதவவே மாட்டினம். எண்டு மனைவிமாரிடம் நல்லதொரு சான்றிதழ் வாங்கியும் இருக்கினம். இதுகளைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோ.( நான் சொன்னா நல்லா இராது.பிறகு என்ரை வீட்டக்காறர் தன்னை வைத்து நான் சதிசெய்வதாக நினைத்துவிடுவார்.)

காரூரன் 7:27 PM  

நன்றி நளாயினி,
*\\ஊருக்கு உதவுவாங்கள் நல்லா. வீட்டுக்கு உதவவே மாட்டினம். எண்டு மனைவிமாரிடம் நல்லதொரு சான்றிதழ் ......\\*
அது உண்மை தான், எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் இருக்கின்றது, வீட்டில் அதிக நேரம் நின்று கொண்டு வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஓரளவு பொறாமையும் தான். விடுமுறைக்குள் ஒரு கட்டுரை தாறன்.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP