December 6, 2008

மேற்குலகில் நம்மவர் காதல்.



மேற்குலகில் வாழும் இளையோருக்கு வாழ்க்கை ஒரு போராட்டம் தான். கல்லூரி நாட்களில் தன‌க்கு ஒரு காதல் இல்லாவிட்டால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று ஓர் அழுத்தம். அதற்காக காதல் இல்லாதவர்களும் காதல் ஒன்று இருப்பதாக நடித்துக் கொள்வார்கள்.



பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில இளைய பெண் பிள்ளைகளின் பெற்றோர் தன் பிள்ளையில் நம்பிக்கையில்லாமல், அவள் போகுமிடம் எல்லாம் பின்னே திரிவார்கள். "என்ன கொடுமை அய்யா இது" என்று இவற்றை விமர்சிப்பவர்களும் உண்டு. பிள்ளை வீடு திரும்பினானா இல்லையா என்று தெரியாத ஒரு கூட்டமும் உண்டு. ஆண், பெண் இரு சாராருக்கும் தாம் மிகவும் கெட்டித்தனமானவர்கள் பெற்றோர்களுக்கு போதிய அறிவு இல்லை என்ற ஒரு நிலைப்பாடும் இருக்கின்றது.

கல்லூரியில் கற்கும் சில ஆண்கள் காலத்திற்கு காலம் பெட்டி மாத்திற மாதிரி காதலியை மாற்றுவார்கள், ஆனால் காதலில் தோல்வியுற்ற பெண்ணை விமர்சிப்பவர்களும் இவர்கள் தான். கல்லூரியில் அனேகமான காதல் கீரோக்களாக தங்களை உருவகித்துக் கொள்ளும் இளைஞர்கள் பெண்களின் பலவீனத்தை நன்கறிந்தவர்களாகவும் காதலை காய் வெட்ட நொண்டிச்சாட்டில் மன்னர்களாகவும் இருப்பார்கள். அனேகமாக காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் ( ஒரு சிலர் விதி விலக்குத்தான்..). தாம் காதலித்து திருமணம் செய்ததையே பெற்ற பிள்ளைகளிடம் மறைத்து பிள்ளையின் பட்டப் படிப்பு முடிந்தவுடனேயே எங்காவது கட்டிக் கொடுக்கவேண்டும் என்று கனவு காண்பவர்களும் உண்டு. காதலித்த பெற்றோர் தாம் விட்ட பிழையை தன் பிள்ளை விடக் கூடாது என்ற ஆதங்கம் என்று எடுத்துக் கொண்டாலும் தவறான அணுகுமுறை என்பது என் கணிப்பு.

மூத்தவள் கறுவலுடன் போய்விட்டாள் என்றாள் அடுத்தவள் ஒரு தெற்காசியனை கட்டினால் போதும் என்று திருப்திப் படும் பெற்றோரும் உண்டு. இவர்கள் ஊரில் சாதி பேதம் பேசியவர்கள் என்பது தான் உண்மை. தனக்கு வருகின்ற போது தான் வாழ்க்கையில் யதார்த்தம் புரிகின்றது. ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டாலும் நம்மவர் மத்தியில் இருக்கும் சவால்களையும் தீர்வையும் அடையாளம் காணமுடியாமல் தான் இருக்கின்றது. டாக்டர் பெம்பிளை, நன்றாய் சம்பாதிக்கும் பெம்பிளை வேண்டும் என்று அலைகின்ற கூட்டமும் உண்டு.கடந்த காலங்களில் கொண்டு திரிந்தவர்கள் பேச்சு திருமணத்தை மற்றவர்களின் வாயை மூட காதல் திருமணம் என்று சொல்லிக் கொள்பவர்களும் உண்டு.

எனக்கு ஒரு நண்பன் அழைத்து தனக்கு திருமணம் நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்றான். நானும் யார் அந்த கொடுத்து வைத்தவள் என்று கேட்க, ஒரு பெரிய மனிதர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரின் பேர்த்தி நல்ல ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கின்றாள் என்றான். அவனிடம் மேற்கொண்டு எந்தக் கேள்வியை முன் வைக்கவில்லை. நண்பன் அவளுடைய பெயரை முதல் சொல்லி அவளைப் பற்றி ஒரு சில வார்த்தை கூறியிருந்தால் நான் சந்தோசப் பட்டிருப்பேன். குடும்பப் பின்னணியையும் சம்பாதிக்கும் திறனையும் சந்தைப் படுத்தும் ஒரு முயற்சியாகவே எனக்கு தோன்றியது.

காமத்தின் பிரதிபலிப்பு தான் காதல் என்போரும், நட்பின் ஒரு பரிமாணம் தான் காதல் என்போரும் விவாதித்துக் கொண்டாலும், இந்த காந்தர்வ கவர்ச்சிக்கு காரணம் அறிய முடியாமல் தான் இருக்கின்றது. மேற்குலகில் வாழும் இளைஞர்களுடன் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எண்ணங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நண்பர்களைப் போல நடத்தினால் அவர்களின் முடிவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

மேற்குலகில் வாங்கும் அனேகமான பொருட்களுக்கு பாவித்து விட்டு தேவை இல்லை என்றால் 3 அல்லது 6 மாதத்தில் திருப்பிக் கொடுக்கலாம் என்ற ஓர் அணுகுமுறை உண்டு. இந்தப் பாதிப்பினால் காதலும் அப்படி ஒரு பொருள் என்று நினைத்து விடுகின்றார்களோ தெரியவில்லை. ஊரில் "சரக்கு" என்று இளம் பெண்களை அழைக்கும் வழக்கம் உண்டு, அதற்கு விளக்கமறிய வர்த்தக ஆசிரியரை கேட்ட போது " விற்பனைக்குள்ள பொருள் சரக்கு எனப்படும்" என்றார். இப்படி திருமணங்கள் இன்றும் ஒரு வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.

இக்கட்டுரை என் கண்ணில் பட்ட அல்லது கேட்டவற்றை அடிப்படையாக கொண்டது. உங்கள் பார்வையையும் தாருங்கள்.


13 comments:

துளசி கோபால் 11:04 PM  

அயல்நாடுகளில் வாழும் நம்மாட்களிடம் பொதுவான ஒரு பயம் இருக்குன்னா அது தங்கள் குழந்தைகளின் திருமண சம்பந்தமானதுதான். அதிலும் பொண் குழந்தை இருந்தாச் சொல்லவே வேணாம்....

தமிழ்க்காரனா இருந்தாப் பரவாயில்லை

தென்னிந்தியனா..... சரி

இந்தியனா? தப்பிச்சோம்

வெள்ளைக்காரனா..... ஐயோ

கடைசியில் கூட்டிக்கழிச்சுப் பார்த்தால்.....

நல்லவனா இருந்தாப் போதுமுன்னு நினைப்புதான்.

காரூரன் 12:20 PM  

வாங்க துளசி கோபால்!

நல்லா சொன்னீங்க, புத்தனுக்கு போதிமரத்தின் கீழ் கிடைத்தது, எம்மவருக்கு பிற தேசத்தில் வாழும் போது கிடைக்கும் அனுபவம் தான்.

ஹேமா, 12:18 PM  

காரூரன்,என்ன சொல்லமுடியும்.
அப்படியே உண்மையை நீங்களே அப்பட்டமாகச் சொல்லிவிட்டீர்கள்.
பிறகென்ன!

மன ஈடுபாட்டோடு காதலித்தோ கல்யாணம் செய்தோ வாழ்பவர்கள் இப்போ சரியான குறைவாகத்தானே இருக்கிறார்கள்.எங்கே...எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த அன்பு வாழ்க்கையை யார்தான் வாழ்கிறார்கள்.ஓரிரு விரல்களை மட்டுமே மடிக்கலாம்.

காரூரன் 7:17 PM  

ஹேமா,

மேற்குலகில் எல்லோரும் தன்னிறைவு பெற்று விட்டதாய் ஒரு நினைப்பு, அதனால் எந்த உறவையும் உதறித் தள்ளும் பரிதாபம். இதற்குள் காதல் என்ன விதிவிலக்கா?

துளசி கோபால் 7:47 PM  

//மேற்குலகில் எல்லோரும் தன்னிறைவு பெற்று விட்டதாய் ஒரு நினைப்பு, அதனால் எந்த உறவையும் உதறித் தள்ளும் பரிதாபம்..//


மேற்குலகோ நம்முலகோ எல்லா இடங்களிலும் இப்போதைய ரெண்டு தலை முறைகளில்தாங்க இப்படி.

பொதுவாச் சொன்னால் இங்கேயும் வயதான தம்பதிகளின் ஒட்டுறவைப் பார்க்கும்போதுதான் இது புரியுது.

அதுக்காக விதிவிலக்கு இல்லாமப்போகலை. நம்ம பக்கங்களிலும் பாருங்க. நம் 'முன்னோர்கள்' கூட சிலர் 'கட் த்ரோட்' களாவும் இருந்துருக்காங்க.

எதையும் பொதுப்படுத்த முடியாது.

மே. இசக்கிமுத்து 3:20 AM  

என்ன சொல்வது, மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்களே. காதல் மணம் செய்து கொண்டவர்கள் கூட பின்னாளில் இந்த குரங்காய் மாறிவிடுகிறார்களே!

தமிழ் மதுரம் 10:24 PM  

எமது கலாச்சாரம் இப்படியான சிந்தனை கொண்ட பெற்றோர்களால் தான் சீரழிகிறது. என்று திருந்துமோ எமது புலம் பெயர் தமிழ்ச் சமூகம்???

Anonymous 5:40 PM  

எங்கட கலாச்சாரம் எண்டால் என்ன?
அந்தக் கலாச்சாரம் எப்படியான சிந்தனைகொண்ட பெற்றோரால் சீரழிகிறது? சொன்னால் விளங்கிக்கொள்ள வசதியா இருக்கும் மெல்பேர்ன் கமல் அண்ணை...

காரூரன் 7:44 PM  

துளசி கோபால்,

நீங்கள் ஊருக்கு போய் இன்றைய நடைமுறை தெரிந்து வைத்திருப்பவர். நான் ஊருக்கு போய் அறிந்து கொள்ளமுடியாததால் தான் மேற்குலகம் என்று குறிப்பிட்டிருந்தேன். கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

காரூரன் 7:46 PM  

வாங்க கமல்!
அனோனிக்கும் ஏதோ டவுட்டாம். கிளியர் பண்ணிவிடுங்கோ!

S.Lankeswaran 11:15 AM  

"மேற்குலகில் வாங்கும் அனேகமான பொருட்களுக்கு பாவித்து விட்டு தேவை இல்லை என்றால் 3 அல்லது 6 மாதத்தில் திருப்பிக் கொடுக்கலாம் என்ற ஓர் அணுகுமுறை உண்டு. இந்தப் பாதிப்பினால் காதலும் அப்படி ஒரு பொருள் என்று நினைத்து விடுகின்றார்களோ தெரியவில்லை. "

சா, நறுக்கு தெரிக்கின்ற வார்த்தைகள்.

Anonymous 8:43 PM  

நல்ல பதிவு தான் ஆனா நிறைய இடிக்குது.இந்த பதிவை ஒரு விவாதமாக்கினால் நல்லாய் இருக்கும்.அது சரி இந்த கமல் இப்பவும் இருக்கிறாரோ கன காலமாய் காணேல்லை அது தான் அவர் கடைசியாய் ஒரு பதிவு போட்டிருந்தார் அதுக்கு பிறகு ஆளை காணேல்லை முடிஞ்கால் சும்மா கதைக்கிறதை விட்டுட்டு சனத்துக்கு உதவ சொல்லுங்கோ எல்லாட்டா பதிவை தொடந்து போட சொல்லுங்கோ,எக்கவுண்டன் மாப்பிளை எல்லரும் வெளிநாட்டிலை சும்மா இடக்கிடை ஆரும் பெத்த்த பிள்ளையளை உசுப்பிவிடவும், சும்மா தனக்கு அவரை தெரியும், இவரை தெரியும் எண்டு ஒரு பதிவும்,
உங்கடை பதிவு ஒரு விவாதாமான பதிவு

காரூரன் 12:25 PM  

அனோனி,

இப்படி வாறது அரசியல் எண்டாலும்..

*\\முடிஞ்கால் சும்மா கதைக்கிறதை விட்டுட்டு சனத்துக்கு உதவ சொல்லுங்கோ எல்லாட்டா பதிவை தொடந்து போட சொல்லுங்கோ\\*

முயற்சிக்கின்றேன்.

*\\எக்கவுண்டன் மாப்பிளை எல்லரும் வெளிநாட்டிலை சும்மா இடக்கிடை ஆரும் பெத்த்த பிள்ளையளை உசுப்பிவிடவும்\\*

எங்கேயோ இடிக்குது... ஆனால் விளக்கம் எனக்கில்லை..... கமலைக் கேட்டுப் பார்ப்பம்

*\\சும்மா தனக்கு அவரை தெரியும், இவரை தெரியும் எண்டு ஒரு பதிவும்,
உங்கடை பதிவு ஒரு விவாதாமான பதிவு\\*

என் பதிவு விவாதத்திற்குடையது என்றால் நல்ல கருத்துக்கள் வெளிவரட்டும். அது ஆரோக்கியமானது. அவரை, இவரைத் தெரியும் என்கிறது எனக்கு விளங்கவில்லை.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP